புதுடெல்லி: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் நேற்று காணொளி அழைப்பு மூலம் கிட்டத்தட்ட நான்கு மணி நேரத்துக்குக் கூட்டம் நடத்தினார்.
கொரோனா கிருமித்தொற்றை முறியடிக்க நடப்பில் உள்ள முடக்கநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படக்கூடும் என்று கலந்துரையாடலுக்குப் பின் பிரதமர் மோடி தெரிவித்தார்.
கலந்துரையாடலின்போது பெரும்பாலான மாநிலங்களின் முதல்வர்கள் முடக்கநிலையை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
டெல்லி, பஞ்சாப், மத்திய பிரதேசம் உட்பட பல மாநிலங்களின் முதல்வர்களும் முடக்கநிலையை நீட்டிக்க வேண்டும் என்றும் நாடுதழுவிய முடக்கநிலை மூலம் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளி யாகியுள்ளது.
பெரும்பாலான மாநில முதல்வர்களின் பரிந்துரையை ஏற்று ஏப்ரல் 30ஆம் தேதி வரை முடக்கநிலை உத்தரவை நீட்டிக்க மத்திய அரசு முடிவெடுக்கக்கூடும் என்றும் விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்தார்.
“முடக்கநிலை விஷயத்தில் எந்த சமரசமும் கிடையாது என எங்களிடம் பிரதமர் மோடி கூறினார். மேலும் 15 நாட்களுக்கு முடக்கநிலை உத்தரவை நீட்டிக்க வேண்டும் என பரிந்துரைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
“எனவே 15 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது தொடர்பாக அடுத்த ஓரிரு நாட்களில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் எனவும் எங்களிடம் பிரதமர் மோடி கூறினார்,” என்று திரு எடியூரப்பா தெரிவித்தார்.
இதற்கிடையே, ஒடிசா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் முடக்கநிலையை ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளன. அதேபோல் மே 1 ஆம் தேதி வரை முடக்கநிலையை நீட்டிப்பதாக பஞ்சாப் மாநிலம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் ஜூன் 10 ஆம் தேதி வரை பள்ளிகள் மூடப்படுவதாக அம்மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
முடக்கநிலை உத்தரவை ஏப்ரல் 30 வரை நீட்டிக்க பிரதமர் மோடிக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் முடக்கநிலை உத்தரவு இல்லாமல், கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகள் மட்டும் எடுக்காதிருந்தால் இம்மாதம் 15ஆம் தேதிக்குள் 200,000 பேர் பாதிக்கப்பட்டிருப்பர் என்று மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்தார்.
இந்திய அரசு உடனடியாக முடக்கநிலை அறிவித்ததால் நடகக்கவிருந்த மிகக் கடுமையான பாதிப்பிலிருந்து இந்தியா தப்பியதாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், கிருமித்தொற்றுக்கு எதிரான போர் தொடர்வதாக இந்திய அதிகாரிகள் கூறினர். இந்தியாவில் இதுவரை 170,000க்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன அவர் கூறினார்.
இந்தியாவில் கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,529ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சக தரவுகள் தெரிவித்துள்ளன. பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 653ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 242 ஆக அதிகரித்துள்ளது.