அடுத்து வரும் வாரத்தில் நான்கு காட்சியளிப்புகள், ஐந்து திட்டப் பணிகளை முடித்துச் சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில், இக்கட்டான சூழலில் மடிக்கணினி காணாமல் போகவே கதிகலங்கிப் போனார் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவி செல்சி சோ. தாம் பயணம் செய்த பேருந்தில் தொலைத்திருக்கலாமோ என்ற சந்தேகத்தில் யூனோஸ் பேருந்து நிலையத்துக்கு விரைந்தார் செல்சி. தாம் பயணம் செய்த பேருந்தின் ஓட்டுநரைப் பற்றிய சரியான விவரங்களை நினைவுகூர முடியாவிட்டாலும் அதிசயம் நிகழக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் பேருந்து யூனோஸ் நிலையத்திற்கு வரும்வரை காத் திருந்தார் அவர்.
கடந்த திங்கட்கிழமை இரவு நேரத்தில் புக்கிட் பாத்தோக்கில் இருந்து யூனோஸை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்துச் சேவை எண் 61ஐ திரு ராமசாமி கிருஷ்ணன், 52, ஓட்டிச் சென்றார். பேருந்தில் ஒரு சில பயணிகளே இருந்தனர். நடுத்தர வயதிலிருந்த பயணி ஒருவர் சந்தேகத்துக்கு இடம்தரும் விதமாக வேறோர் இருக்கையில் இருந்த பொருள் ஒன்றை எடுத்துக்கொண்டு இறங்க முற்பட்டார்.