கோலாலம்பூர்: எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 35 அமெரிக்க டாலர் ஆகக் குறைந்துவிட்ட நிலையில் மலேசியாவுக்கு எண்ணெய் வருமானம் மிகவும் குறைந்து விட்டதால் அதனை ஈடுகட்டும் வகையில் மலேசிய அரசாங்கம் 9 பில்லியன் ரிங்கிட் (S$3.05 பில்லியன்) சேமிப்பதற் கான புதிய நடவடிக்கைகள் பற்றி மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று அறிவித்தார். 2016 வரவு செலவு திட்ட அறிக்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக் காட்சி உரையில் அவர் இதுபற்றி அறிவித்தார்.
நாட்டின் நடப்பு பொருளியல் சூழலைக் கருத்தில்கொண்டு கடந்த அக்டோபர் மாதம் தாக்கல் செய்யப்பட்ட 2016-ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக திரு நஜிப் கூறினார். "இந்த மாற்றங்களால் எந்த வகையிலும் மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறிய அவர், நாட்டுக்கு எது சிறந்ததோ அதை நாங்கள் செய்வோம்," என்று சொன்னார். இந்த மாற்றங்களால் ஏற்படும் விளைவுகள் ஆராயப்பட்டு, நிதி ஒதுக்கீட்டில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் இந்த மாற்றத்தால், ஒரே மலேசியா உதவித் தொகையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
2016ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட அறிக்கையில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்து அறிவிப்பதற்காக மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், அமைச்சர்களுடன் வருகிறார். படம்: ராய்ட்டர்ஸ்