வீட்டில் இருந்தபடியே உள்ளூர் கலைக்குழுவான அப்சராஸ் ஆர்ட்ஸின் ஆஞ்சனேயம்- அனுமனின் ராமாயண நாட்டிய நாடகத்தைக் கண்டு களிக்க வகை செய்துள்ளது சிஸ்டிக் அமைப்பு.
தற்போதைய கொவிட்-19 சூழலில் உள்ளூர் கலைகளுக்கு உதவும் வண்ணம் ‘எஸ்பிளனேட் சிஸ்டிக் லைஃப்’ எனும் நேரலை தளத்தின் மூலம் மூன்று நிகழ்ச்சிகளை மக்கள் இணையத்தில் இலவசமாகக் கண்டு களிக்கலாம். அவற்றில் ஒன்று அப்சராஸ் ஆர்ட்ஸின் ‘ஆஞ்சனேயம்- அனுமனின் ராமாயணா’ எனும் நாட்டிய நாடகம்.
சிஸ்டிக் இணையத்தளத்தில் இந்த நாட்டியத்தைக் காண மக்கள் பதிவு செய்துகொள்ளலாம்.
நிகழ்ச்சியைக் காண கட்டணம் இல்லை என்றாலும் $5 முதல் $50 வரை கட்டணமாக மக்கள் முன்வந்து கொடுக்கலாம்.
திரட்டப்படும் நிதி சம்பந்தப்பட்ட கலைக்குழுக்களுக்குச் சென்றடையும்.
இந்த நாட்டிய நாடகத்திற்கான மின் நுழைவுச்சீட்டைப் பெற்றுக்கொண்டு இணையத்தளத்தில் வரும் மே 24 முதல் மே 31ஆம் தேதி வரை மக்கள் எப்போது வேண்டுமானாலும் எங்கிருந்தும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கலாம்.
தற்போதைய கொவிட்-19 சூழல் நாட்டிய கலைக்குழுக்களுக்கு மிகவும் சவால் மிக்கதாக உள்ளது என்றார் அப்சராஸ் ஆர்ட்ஸ் கலைக்குழுவின் கலை இயக்குநர் திரு அரவிந்த் குமாரசாமி. “உலகளாவிய கட்டுப்பாடுகளால் பல உள்ளூர், வெளிநாட்டு நிகழ்ச்சிகள் ரத்து ஆகிவிட்டன,” என்ற அவர் லாபநோக்கற்ற நன்கொடை அமைப்பான அப்சராஸ் ஆர்ட்ஸ் வழக்கநிலைக்குத் திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும் என்றார்.
இந்த இணைய நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் நிதி தமது கலைக்குழுவும் நடனமணிகளும் தற்போதைய சூழலிலிருந்து விரைவில் மீண்டு வர உதவும் என்றார் திரு அரவிந்த்.
நிகழ்ச்சிக்கான மின் நுழைவுச்சீட்டுகளை www.sistic.com.sg எனும் சிஸ்டிக் இணையத்தளத்தில் பெறலாம்.