சென்னை: ஊரடங்கு உத்தரவின் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் மார்ச் 24ஆம் தேதி மாலை 6 மணியுடன் மூடப்பட்டன. அன்று விற்பனையான பணத்தை பணியாளர்கள் வங்கியில் மறுநாளன்று செலுத்தினர். மதுபாட்டில்கள் கடைகளிலேயே இருப்பு வைக்கப்பட்டன. பல இடங்களில் திருட்டு, முறைகேடாக மது விற்பனை போன்ற சம்பவங்களும் நடந்தேறின.
ஊரடங்கும் அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டதால் மதுபாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகமே கிடங்குக்கு மாற்றியது. அப்போது ஒப்படைக்கப்பட்ட மதுவுக்கும் மார்ச் 24ல் கடைகள் அடைக்கப்பட்டபோது காட்டப்பட்ட இருப்புக்கும் வித்தியாசம் இருந்தது.
இந்த வித்தியாசத் தொகையை வங்கியில் செலுத்தும்படி நிர்வாகம் உத்தரவிட்டதன் பேரில் பணி யாளர்கள் செலுத்தினர்.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்கள் கூறுகையில், “தமிழகத்திலுள்ள 5,300 கடைகளில் 95% கடைகளில் இருப்புக் குறைவு உள்ளது. சில கடைகளில் ரூ.12 லட்சம் வரை இருப்புக் குறைவு இருந்துள்ளது. இக்கடை பணியாளர்கள் ரூ.7 லட்சத்துக்கும் அதிகமாக செலுத்தவேண்டும். மதுரை மாவட்டத்தில் மட்டும் இத்தொகை ரூ.20 கோடியைத் தாண்டும். மாநிலம் முழுவதும் ரூ.200 கோடிக்கும் மேல் அரசுக்கு வருமானம் கிடைக்கும். இத்தொகையை வசூலித்த பின்னரும் ஊழியர்கள் மீது துறை ரீதியாக வேறு நடவடிக்கை எடுக்காமல் இருக்கவேண்டும்,” என்றனர்.