தற்காப்பு, வெளியுறவு அமைச்சுகளின் மூத்த துணை அமைச்சரும் தென்கிழக்கு வட்டார மேயருமான டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் தமது நோன்புப் பெருநாள் வாழ்த்தை தமிழில் தெரிவிக்கும் காணொளி ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது.
பெருநாளைக் கொண்டாடுவோம் என்னும் தமிழ்ப் பாடலுடன் தொடங்கும் அந்தக் காணொளியின் இடையே டாக்டர் மாலிக்கி தமிழில் பேசினார்.
“அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். இந்த ஆண்டு நோன்புப் பெருநாளை வித்தியாசமாகக் கொண்டாடுகிறோம். ஆயினும் இப்பெருநாளின் முக்கிய அம்சத்தை மறந்துவிடக்கூடாது,” என்ற அவர், ஒரு மாத நோன்பை வெற்றிகரமாக முடித்ததையும் கொவிட்-19க்கு எதிராக ஒன்றிணைந்து நின்றதையும் தமது உரையில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் ஆங்கிலத்திலும் பெருநாள் வாழ்த்தை அவர் தெரிவித்தார்.
அந்த 2 நிமிடம் 24 வினாடி காணொளி யூடியூப் ஊடகத்தில் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
பெருநாள் வாழ்த்தை முதன் முறையாக தமிழில் தெரிவித்தாலும் இதற்கு முன்னர் தமது தொகுதியில் நடைபெற்ற தேசிய தின விருந்து நிகழ்ச்சிகளில் தமிழில் உரையாற்றி இருப்பதாக டாக்டர் மாலிக்கி தெரிவித்தார்.