சிங்கப்பூரையும் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரையும் இணைக்கும் அதிவேக ரயில் திட்டத்தை மேலும் ஏழு மாதங்களுக்கு, அதாவது இவ்வாண்டு இறுதி வரை நிறுத்தி வைக்க சிங்கப்பூர் இணக்கம் தெரிவித்துள்ளது. அந்த ரயில் திட்டம் தொடர்பில் மலேசியா முன்மொழிந்துள்ள மாற்றங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக அந்தக் கால நீட்டிப்பை வழங்குமாறு அந்நாட்டின் அனைத்துலக வர்த்தக, தொழில் மூத்த அமைச்சர் அஸ்மின் அலி தமக்கு எழுதி
இருந்தார் என்று போக்குவரத்து அமைச்சர் கோபூன் வான் தமது
ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று பதிவிட்டார்.
“திட்டம் தொடர்பான எந்த மாற்றத்திற்கும் நாம் ஒப்புதல் அளிக்க வேண்டும். அந்த வகையில், மலேசியா முன்வைக்கும் மாற்றங்களை மதிப்பிட இரு நாடுகளுக்கும் இந்தக் கால நீட்டிப்பு வகைசெய்யும்,”
என்று திரு கோ தெரிவித்துள்ளார்.
‘இருதரப்பு ஒத்துழைப்பு உணர்வுடன், இறுதி முறையாக இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அதிவேக ரயில் திட்டத்தை நிறுத்தி வைக்க இணங்கியுள்ளோம்,” என்று அமைச்சர் கோ கூறியிருக்கிறார்.
“கூடிய விரைவில் திட்டம் தொடர்பில் மீண்டும் ஆலோசனைகளைத் தொடங்க இரு நாட்டு அரசுகளும் இணக்கம் தெரிவித்துள்ளன. திட்டத்தின் வர்த்தக, தொழில்நுட்ப அம்சங்கள் தொடர்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள சில மாற்றங்கள் குறித்தும் விவாதிக்கப்படும்,” என்று திரு அஸ்மின் அலி ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளார்.
அதிவேக ரயில் திட்டம் தொடர்பில் சிங்கப்பூர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் இடம்பெறும் மலேசியக் குழுவிற்குத் தலைமையேற்க மலேசிய அமைச்சரவை தம்மைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
திட்டம் குறித்த இறுதி முடிவை அறிவிக்க இன்றே கடைசி நாள் என்ற நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. திட்டத்தை
ஈராண்டுகளுக்கு நிறுத்திவைப்பது என இரு நாடுகளும் கடந்த 2018 செப்டம்பரில் முடிவுசெய்தன. இதையடுத்து, 350 கிலோமீட்டர்
நீளம் கொண்ட அந்த ரயில் திட்டப் பணிகள் நிறைவுறும் தேதியும் 2026 டிசம்பரில் இருந்து 2031 ஜனவரிக்கு மாற்றப்பட்டது.
இதனிடையே, அதிவேக ரயில் திட்டத்தில் சில மாற்றங்களை முன்வைக்க விரும்புவதாகவும் அதனால் அதனை மே லும் ஏழு மாதங்களுக்கு நிறுத்தி வைக்குமாறும் மலேசியா கேட்டுக்கொண்டதைப் போக்குவரத்து அமைச்சும் உறுதிசெய்தது.