இப்போது தங்கள் வேலையை இழந்தால், தற்போதைய வாழ்க்கைபாணியை ஆறு மாதங்களுக்குப் பிறகும் தொடர்ந்து மேற்கொள்ள சிங்கப்பூரர்கள் பலரிடம் போதிய சேமிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நோய் முறியடிப்புக் காலம் நடப்பில் இருந்த கடந்த மாதத்தில், வேலை செய்யும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளிடம் நடத்தப்பட்ட ஓசிபிசி ஆய்வில், அந்தப் பிரிவில் மூவரில் இருவருக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு பிறகும் தங்களின் வழக்கமான வாழ்க்கைபாணியைத் தொடர போதிய சேமிப்பில்லை என்று தெரியவந்துள்ளது.
அவர்களில் பாதி பேர் சம்பளக் குறைப்பாலும் சம்பளமில்லா விடுப்பாலும் தரகுக்கட்டண வருமானக் குறைப்பாலும் அவதியுறுகின்றனர்.
கொரோனா கிருமித்தொற்று நெருக்கடியால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக குடியிருப்பாளர்களின் நிதி நிலைமை எப்படி உள்ளது என்பதைக் கண்டறிய இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்று ஓசிபிசி வங்கி தெரிவித்தது.
மாதம் $2,000யிலிருந்து சம்பா திக்கும் 21 முதல் 65 வயது வரையி லான வேலை செய்யும் 1,000 பெரியவர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வில் பங்கேற்ற பாதி பேர் தங்கள் சேமிப்பின் பெரும்பகுதி செலவாகிவிட்டது என்றும் சுமார் 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு 20 விழுக்காட்டுக்கும் மேல் குறைந்துவிட்டது என்றும் மூவரில் ஒருவர் தங்கள் சேமிப்பு 20 விழுக்காடு வரை குறைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
இன்னொரு 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பை நல்ல முறையில் கட்டிக்காத்து வருவதாகவும் பங்கேற்றவர்களில் ஐந்து விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு முன்பைவிட 20 விழுக்காட்டுக்கு மேல் அதிகரித்துள்ளது என்றும் எஞ்சியுள்ள 20 விழுக்காட்டினர் தங்கள் சேமிப்பு 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது என்றும் கூறினர்.
கொரோனா கொள்ளைநோய் வயது வாரியாக வெவ்வேறு பிரிவினரை வெவ்வேறு விதத்தில் பாதித்திருப்பதால், தங்கள் ஓய்வுகாலத் திட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் கருத்து தெரிவித்தனர்.
ஆய்வில் பங்கேற்ற 40 முதல் 54 வயது வரை உள்ளவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் ஓய்வுகாலச் சேமிப்பைக் குறைத்துகொண்டதாகவும் நிதி திட்டங்களில் சேர்ந்திருக்கும் 20 வயதுகளில் உள்ளவர்களில் 23 விழுக்காட்டினர் தங்கள் ஓய்வுகாலத்துக்காக அதிக தொகையை ஒதுக்கி வைத்திருப்பதாகவும் கூறினர்.
இருப்பினும், அடுத்த ஆறு மாதங்களில் நிலைமை மேம்படும் என்று ஆய்வில் பங்கேற்றவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.