புதுடெல்லி: இந்திய பொருளாதார நிலை கீழ்நிலை குறியீடான பி.ஏ.ஏ.-3 என்ற அளவிற்கு சென்றிருப்பதாக அனைத்துலக பொருளியல் ஆய்வு நிறுவனமான ‘மூடி’ அறிக்கை வெளியிட்டுள்ளது.
1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவுக்கு பொருளாதார தடை விதித்தன.
இதனால் இந்தியா பொருளாதார வீழ்ச்சிக்கு உள்ளானது. அப்போது இந்தியாவின் தரத்தை பி.ஏ.ஏ.-2-ல் இருந்து பி.ஏ. ஏ.-3க்கு மாற்றி இருந்தது. அதே நிலைக்கு இப்போது வந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது 22 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு பொருளியல் வீழ்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது.
இந்தியா ஏற்கெனவே பொருளாதார மந்தநிலையில்தான் இருந்தது. கொரோனா பாதிப்பு அதை மேலும் மோசமாக்கி இருப்பதாகவும் அனைத்துலக ஆய்வு நிறுவனமான ‘மூடி’ அமைப்பின் ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.
2016ஆம் ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.3 விழுக்காடாக இருந்தது. 2019 நிதியாண்டு இறுதியில் அது 4.2 ஆக குறைந்தது. தற்போதைய நிலையில் 4.0 விழுக்காடாக இன்னும் வீழ்ச்சி அடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
2021ஆம் ஆண்டு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.7 விழுக்காடாக இருக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் 6 விழுக்காடு அளவிற்கு உயர்த்திவிட வேண்டும் என்றும் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டங்கள் சரியாக செயல்படவில்லை. அது மந்த நிலையிலேயே இருந்த காரணத்தால் ஏற்கெனவே பொருளாதாரத்தின் குறைவான வளர்ச்சியையே கொண்டிருந்தது. இப்போது கொரோனா பிரச்சினை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை மிகவும் பின்னடைய செய்திருப்பதாக அந்த ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.