புதுடெல்லி: இந்தியாவின் பெயரை மாற்றக் கோரி டெல்லியைச் சேர்ந்த நமா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், இந்தியா என்ற ஆங்கில பெயர் காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளதாகவும் நாட்டு மக்கள் காலனி ஆதிக்கச் சிந்தனையில் இருந்து வெளிவர நாட்டின் பெயரை ‘பாரத்’ என மாற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
“நாட்டின் பெயர்கள் வெவ்வேறு ஆவணங்களில் வெவ்வேறு விதமாக உள்ளன. ஆதார் அட்டையில் ‘பாரத் சர்க்கார்’ என்று உள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் ‘யூனியன் ஆஃப் இந்தியா’, கடப்பிதழ்களில் ‘இந்திய குடியரசு’ என இருப்பது குழப்பத்தை உருவாக்குகிறது. ஒருவர் தேசத்தின் பெயரை அறிந்துகொள்ள ஒரே மாதிரியான பெயர் இருக்க வேண்டும்.
“நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்கும் வகையில் நாட்டின் பெயரை மாற்ற வேண்டும்.
“நாட்டின் பெயரை பாரத் என மாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்,” என்றும் மனுதாரர் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். அதேசமயம், நாட்டின் பெயரை பாரத் என மாற்றக் கோரிய மனுவின் நகலை, மத்திய அரசின் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கும்படி மனுதாரருக்கு உத்தரவிட்டனர். இந்த மனுவை கோரிக்கை மனுவாகக் கருதி மத்திய அரசு முடிவு எடுக்கும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.