ஜோகூர் பாரு: மாநிலத்தில் மீண்டும் ஒரு அதிகார சண்டை தொடர்ந்தால் புதிதாக தேர்தல் நடத்தும் பொருட்டு சட்டமன்றத்தை கலைக்கவிருப்பதாக ஜோகூர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநிலத்தில் நடந்து வரும் அரசியல் கொந்தளிப்பு குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்திய அவர், சக்தியற்ற தலைவர்கள் இருப்பதாகவும், சுயநலத்திற்காக தொடர்ந்து பதவியேற்கிறார்கள் என்றும் கூறினார்.
“தற்போதைய நெருக்கடி நிலையில், மக்களைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் துன்பங்களை மேலும் அதிகரிக்கத் தயாராக உள்ளனர்.
“என் மக்கள் துன்பப்படுவதை என்னால் பார்க்க முடியாது, என் மாநிலத்தைச் சீர்குலைக்க நான் விடமாட்டேன்,” என்றார்.
கடந்த பிப்ரவரி மாதம் பெரிக்காத்தான் நேசனல் மாநில அரசாங்கத்தை அமைத்தது.
தற்போது மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு போதுமான சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ளதாக ஜோகூர் பக்கத்தான் ஹரப்பான் கூறி வருகிறது.
ஜோகூரில் பெரிக்காத்தான் நேசனலுக்கு 29 இடங்களும் பக்கத்தான் ஹரப்பான் கூட்டணிக்கு 27 தொகுதிகளும் உள்ளன.
பெரிக்காத்தான் நேஷனல் கட்சியிலிருந்து யாராவது ஒரு சட்டமன்ற உறுப்பினர் கட்சி தாவினால்கூட தொங்கு சட்டமன்றம் உருவாகும் நிலை ஏற்பட்டுவிடும் நிலை உள்ளது.