அழகு நிலையத்தில் சிறிய முகக்கவசம்
பேங்காக்: தாய்லாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால் ஊரடங்கில் மூன்றாம் கட்டமாக பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் அழகு நிலையங்கள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பேங்காக்கில் அழகு நிலையம் ஒன்றில் வாய் மற்றும் மூக்கை மட்டும் மூடும் வகையில் முகக்கவசம் பயன்படுத்தப்படுகிறது. இந்த மறுபயன்பாட்டு முகக்கவசத்தால் திருப்திகரமான சேவையை பெறமுடிவதாக வாடிக்கை
யாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். படம்: ராய்ட்டர்ஸ்
காபூல் குண்டுவெடிப்பில் இருவர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் பிரபலமான பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை உள்ளூர் நேரப்படி இரவு 7:25 மணியளவில் வஜீர் அக்பர் கான் பள்ளிவாசலில் குண்டு வெடித்தது.
மன்னிப்பு கோரிய மலேசிய அழகு ராணி
கோலாலம்பூர்: அமெரிக்காவில் நடந்து வரும் போராட்டங்கள் குறித்து கறுப்பின மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று தான் கூறிய கருத்திற்கு மலேசிய அழகு ராணி சமந்தா கேட் ஜேம்ஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.
2017ஆம் ஆண்டில் மலேசியாவைப் பிரதிநிதித்து பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்துகொண்ட சமந்தா, தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் “கறுப்பின மக்களுக்கு சொல்கிறேன், அமைதியாக இருங்கள், இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளுங்கள், உங்களை பலப்படுத்தும்,” என்று பதிவிட்டிருந்தார். அவரது இந்தப் பதிவிற்கு சமூக ஊடகத்தில் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அவர் பலரது கோபத்திற்கு ஆளானார்.