வேலை தேடுவோருக்கு உதவுவதற்காக சிங்கப்பூரின் 24 வீடமைப்பு வளர்ச்சிக் கழக பேட்டைகளிலும் வாழ்க்கைத்தொழில் நிலையங்களை அமைக்க அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளதாக மனிதவள அமைச்சர் ஜோசஃபின் டியோ நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவித்தார்.
தேசிய தொழிற்சங்க காங்கிரஸ், வேலைவாய்ப்பு, வேலைத்தகுதிக் கழகம், சமூக சேவை நிலையங்கள், சமூக மேம்பாட்டு மன்றங்கள், சுயஉதவிக் குழுக்கள் ஆகியவற்றின் பங்காளித்துவத்துடன் தற்போது ஐந்து வாழ்க்கைத்தொழில் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அத்துடன், வேலை தேடுவோர் MyCareers Future.sg என்ற இணையவாயில் வழியாகவும் உதவி கோரலாம்.
“வேலை தேடுவோருக்குப் புதிய வழிகளைத் திறந்துவிடவும் அவர்களை முறையாக வழிநடத்தவும் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்,” என்று அமைச்சர் டியோ கூறினார்.
அதே நேரத்தில், தாங்கள் முன்னர் நினைத்துப் பார்த்திராத, பரிசீலித்திராத வேறு துறைகளிலும் பணியாற்றத் தயாராக இருக்கும் வகையில் வேலை தேடுவோர் திறந்த மனதுடன் இருக்க வேண்டும் என்றும் திருவாட்டி டியோ வலியுறுத்தியுள்ளார்.
“அவர்கள் முதலாளிகளுக்கும் ஒரு வாய்ப்பு தரவேண்டும், தங்களுக்கும் ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்,” என்றார் அமைச்சர்.
இவ்வாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்திலும் அதன்பின்னர் தாக்கல் செய்யப்பட்ட மூன்று துணை வரவுசெலவுத் திட்டங்களிலும் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் காத்து, வர்த்தகங்களுக்கும் ஊழியர்களுக்கும் தேவையான ஆதரவை வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
“அத்தகைய ஆதரவையும் பாதுகாப்பையும் வழங்கவில்லை எனில், வேறு சில நாடுகளைப் போல இங்கும் வேலையின்மை விகிதம் மிகுதியாக இருந்திருக்கும்,” என்றார் திருவாட்டி டியோ.
ஆனாலும், இன்னும் வேலைகளை இழக்க நேரிடலாம் என்றும் அதே வேளையில் அவை எவ்வளவு கடுமையானதாக இருக்கும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைத்து துறைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டோர் மற்றும் பணியிடைக்கால ஊழியர்கள், உயர்கல்வி நிலையங்களில் புதிதாகப் பட்டம் பெற்றோர், தொடர்ந்து சுயமாகத் தொழில் செய்ய அல்லது வேறு வேலைக்குச் செல்ல விரும்பும் சுயதொழில் புரிவோர் என்ற மூன்று வகைப்பட்ட ஊழியர்களுக்கு உதவ புதிய வழிகள் தேவைப்படுகின்றன என்று அமைச்சர் டியோ சொன்னார்.
காலிப் பணியிடங்களைக் காட்டிலும் வேலை தேடுவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், நம்பிக்கையுடன் இருப்பதற்கு மூன்று காரணங்களையும் அவர் சுட்டினார்.
முதலாவதாக, வேலை செய்யும் பெரியவர்களுக்குத் தரமான பயிற்சியை வழங்கும் வகையில் சிங்கப்பூர் ஒரு தரமான ‘தொடர் கல்வி, பயிற்சி’ முறையைக் கொண்டு இருப்பதை திருவாட்டி டியோ குறிப்பிட்டார்.
அண்மைய ஆண்டுகளில் வகுக்கப்பட்ட தொழில்துறை உருமாற்றத் திட்டங்கள் மூலம் ஒவ்வொரு துறையிலும் செயல்திறமிக்க வழிகளில் பயிற்சி, இணைப்புத் திட்டங்களை ஏற்படுத்த முடியும் என்பது அமைச்சர் குறிப்பிட்ட இரண்டாவது காரணம்.
இறுதியாக, நிச்சயமற்ற சூழலிலும் ஒன்றாக இணைந்து, ஒரே இலக்கை நோக்கி பயணம் செய்யக்கூடிய தனித்துவமிக்க முத்தரப்புப் பங்காளித்துவத்தை சிங்கப்பூர் கொண்டிருப்பதாக அவர் கூறினார்.