கொவிட்-19 நோய்ப் பரவலால் பலரும் வீட்டில் அடைந்து கிடக்கும் இந்த காலகட்டத்தில் பாரம்பரிய இந்திய கைவினைக் கலைகளிலும் விளையாட்டுகளிலும் தொடர்ந்து இணைந்து இருக்க இந்திய மரபுடைமை நிலையம் ஒரு புது முயற்சியில் இறங்கியுள்ளது.
பல்லாங்குழி, ரங்கோலி, பரமபதம், ஐந்து கற்கள் கொண்டு விளையாடும் அஞ்சாங்கல் போன்ற பாரம்பரிய கலைகளையும் விளையாட்டுகளையும் ஒட்டிய காணொளிகள் இந்த மாதமும் அடுத்த மாதமும் வெளியிடப்படும்.
இந்திய மரபுடைமை நிலையத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்படும் இந்தக் காணொளிகளைப் பார்த்து வீட்டில் இருந்தவாறு விளையட்டுகளையும் கைவினைப் பொருட்களையும் உருவாக்கலாம்.
இந்திய கலாசார, பாரம்பரிய அம்சங்களை ஆராயவும் நெருங்கிய உறவுகளுடன் சேர்ந்து நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவிடவும் இந்த முயற்சி வாய்ப்பளிக்கிறது என்று குறிப்பிட்டார் இந்திய மரபுடைமை நிலையத்தின் பொது மேலாளரான திருமதி மரியா பவானி தாஸ்.
“நமது மரபுடைமை தகவல்களை மின்னிலக்கமயமாக்குவது தேசிய மரபுடைமைக் கழகத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று. அரும்பொருளகங்களும் மரபுடைமை நிலையங்களும் தற்காலிகமாக மூடியிருக்க வேண்டிய நிலையில் இந்த முயற்சி மேலும் முக்கியமாகிறது.
“பார்வையாளர்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சொந்தமாக பாரம்பரிய விளையாட்டுகளையும் கைவினைப் பொருட்களையும் உருவாக்கும் முறைகளை இந்த இணையக் காணொளித் தொடர் காட்சிப்படுத்தும்,” என்றார் திருமதி மரியா.
காணொளி குறித்த மேல் விவரங்களுக்கு https://www.facebook.com/indianheritagecentre/ எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.
அத்துடன், இந்திய மரபுடைமை நிலையத்தின் நிரந்தர கண்காட்சிகளின் ஒலி சுற்றுலாவை அனுபவிக்க ‘சமார்டிஃபை’ என்ற செயலியை bit.ly/applesmartify அல்லது bit.ly/googlesmartify என்ற இணைப்புகளின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.