சென்னை: சென்னையில் நாளும் அதிகரித்து வரும் கொரோனா கிருமித்தொற்றை ஒரு கட்டுக்குள் கொண்டுவர ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழுவைக் களமிறக்கிஉள்ளது தமிழக அரசு.
தமிழகத்தில் கிருமித்தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்ட 28,694 பேரில் 19,826 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
கிருமி பாதிப்பால் உயிரிழந்த 232 பேரில் சென்னையில் மட்டுமே 178 போ் மரணமடைந்துள்ளனா். மொத்த உயிரிழப்பில் சென்னையில் மட்டும் 76% உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
சென்னை மாவட்டம் 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, கிருமித் தடுப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக ராயபுரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, தண்டையார்பேட்டை ஆகிய மண்டலங்களில்தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கொரோனாவைக் கட்டுப்படுத்த மூன்று மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் வீதம் நியமித்துள்ளது தமிழக அரசு.
இதுகுறித்து தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணையில், “சென்னை மாநகராட்சியைப் பொறுத்தவரை கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு மண்டலம் வாரியாகவும் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
“இக்குழுக்களை ஒருங்கிணைக்கவும் நிவாரணப் பணிகளை வழங்கவும் ஐந்து அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அமைச்சரும் மூன்று மண்டலங்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபடுவர்.
“அதன்படி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை மாநகராட்சியில் உள்ள மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம் மண்டலங்களையும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலங்களையும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் மண்டலங்களையும் வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திருவொற்றியூர், மணலி, திரு.வி.க. நகர் மண்டலங்களையும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர் ஆகிய மண்டலங்களையும் ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபடுவார்கள்,” என்று கூறப்பட்டுள்ளது.
தற்போது அமைக்கப்பட்ட இந்த அமைச்சர்கள் குழுவினராவது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா கிருமியைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்களா என்பதே சென்னை மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.