வாஷிங்டன்: ஹாங்காங்கிற்கான தேசிய பாதுகாப்பு சட்டத்தை சீனா நிறைவேற்றியதைத் தொடர்ந்து, ஹாங்காங்கிற்கு அதிநவீன பாதுகாப்பு ராணுவ உபகரணங்களை ஏற்றுமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ அறிவித்துள்ளார்.
ஹாங்காங்கின் சுதந்திரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் சீனா இச்சட்டத்தைக் கொண்டு வந்துள்ளதாக ஹாங்காங் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சீனாவிற்கு எதிராக ஹாங்காங்கில் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்குக் தண்டனை விதிக்கும் வகையில் சீனா இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.
இச்சட்டம் தொடர்பில் உலக நாடுகள் பலவும் சீனாவைக் கண்டித்து வந்தாலும் அது தன் முடிவில் இருந்து பின்வாங்கவில்லை.
இதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகமும் ஹாங்காங் தொடர்பான தனது கொள்கைகளை மாற்றி அமைக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய பொம்பியோ, “எங்களைப் பொறுத்தவரை இனி சீனாவும் ஹாங்காங்கும் ஒன்றுதான். சில பொருட்களைச் சீனாவிற்கு கொடுப்பதில் என்ன கட்டுப்பாடு உள்ளதோ அதேதான் ஹாங்காங்கிற்கும் பின்பற்றப்படும்,” என்றார்.
ஹாங்காங் முழுவதுமாக, சீன ஆட்சியாளர்கள் மற்றும் ராணுவத்தின் பிடியில் வந்துவிட்டால், தான் செய்யும் பாதுகாப்பு உதவி மூலம் சீன ஆயுத வலிமை அதிகரித்து அது தனக்கோ பிற நாடுகளுக்கோ கேடு விளைவிக்கக்கூடாது என்பதில் அமெரிக்கா முன்னெச்சரிக்கையாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ஹாங்காங்கின் சிறப்பு அந்தஸ்தைத் திரும்ப பெறுவதாக அமெரிக்க வர்த்தகத் துறை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகளுக்குப் பழிவாங்கும் விதமாக ஹாங்காங் தொடர்பான விஷயங்களில் மிக மோசமாக நடந்துகொண்ட அமெரிக்கர்களுக்கு எதிராக விசா கட்டுப்பாடுகளை விதிக்க சீனா முடிவு செய்துள்ளது.