சிங்கப்பூரை இரண்டு அல்லது மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணி ஆட்சி செய்ய வேண்டும் என்றும் சிங்கப்பூரில் ஆரோக்கியமான ஜனநாயகம் நடப்பில் இருக்க வேண்டும் என்றும் பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மூன்றில் ஒரு பங்கு இடங்களை எதிர்க்கட்சிகள் வெல்வது முக்கியம் என்று பாட்டாளிக் கட்சி தொடர்ந்து நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த இலக்கை அடைவது மிகவும் சவால்மிக்கதாக இருக்கும் என்று பொங்கோல் வெஸ்ட் தொகுதியில் இன்று தொகுதி உலா மேற்கொண்டபோது திரு பிரித்தம் சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அப்படி ஒரு நிலை ஏற்பட்டாலும் மக்கள் செயல் கட்சிக்கு மிக வலுவான அதிகாரம் தொடர்ந்து இருக்கும் என்றார் அவர்.
“அக்கட்சியால் தொடர்ந்து மசோதாக்களைத் தாக்கல் செய்ய முடியும். ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அதற்கு அறுதிப் பெரும்பான்மை, அதாவது நாடாளுமன்றத்தில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு இடங்களை அது கொண்டிருக்க வேண்டும்,” என்று திரு பிரித்தம் சிங் கூறினார்.
2017ஆம் ஆண்டில் குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட அதிபர் தேர்தலை அவர் உதாரணம் காட்டினார். கடந்த தேர்தலில்களில் சில தொகுதிகளில் மக்கள் செயல் கட்சி தோல்வியைத் தழுவிய பிறகு, அது மக்களின் கருத்துகளுக்கு இன்னும் கூடுதலாக செவிசாய்க்கத் தொடங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online