பாட்டாளிக் கட்சி, மக்கள் செயல் கட்சியின் நிழலாகச் செயல்படும் கட்சி அல்ல என்பதை பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் திரு பிரித்தம் சிங் வலியுறுத்தியுள்ளார்.
நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட தேர்தல் விவாதத்தில் மக்கள் செயல் கட்சியின் நிழலாக பாட்டாளிக் கட்சி செயல்படுவதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனின் இந்தக் கருத்தைத் தேர்தல் நேர சூழ்ச்சி என திரு பிரித்தம் சிங் இன்று வர்ணித்துச் சாடினார்.
அல்ஜுனிட் குழுத் தொகுதியில் போட்டியிடும் பாட்டாளிக் கட்சி வேட்பாளர்கள் இன்று கோவன் ஹவ்காங் சந்தை, உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா மேற்கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் திரு பிரித்தம் சிங் பேசினார். பாட்டாளிக் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவை மக்கள் செயல் கட்சியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டவையுடன் ஒத்திருந்ததாக டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் கூறியதை அவர் ஏற்கவில்லை.
“மக்கள் செயல் கட்சி சொல்வது உண்மை என்றால் எங்கள் தேர்தல் அறிக்கை குறிப்புகளை அவர்கள் அப்படியே எடுத்து அந்தக் கருத்துகளையே தாங்களும் கொண்டிருப்பதாகக் கூறியிருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் அது சிங்கப்பூரின் அரசியல் சூழலையே மாற்றியிருக்கும். கூடுதல் பரிவு, கருணைமிக்க சமுதாயம் உருவாகியிருக்கும்,” என்றார் திரு பிரித்தம் சிங்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online