சிங்கப்பூரில் மேலும் 7 ஊழியர் தங்கு விடுதிகள் கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டதாக நேற்று (ஜூலை 8) சுகாதார அமைச்சு அறிவித்தது. இந்த விடுதிகளில் தற்போது கிருமித்தொற்றிலிருந்து மீண்டவர்கள் மற்றும் அண்மையில் கிருமித்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் மட்டுமே உள்ளனர்.
துவாஸ் சவுத் ஸ்திரீட்12, எண் 109 உபி அவென்யூ 4, எண் 11 டெஃபு லேன் 1, எண் 12 குவோங் மின் ரோடு, எண் 18 உட்லண்ட்ஸ் தொழிற்பேட்டை E1, எண் 55 ஜென்டிங் லேன், எண் 6 துவாஸ் வியூ ஸ்குவேர் ஆகிய இடங்களில் இருக்கும் தங்கும் விடுதிகள் அவை.
நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், நீண்டகால சிறுநீரக நோய் போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த 69 வயது சிங்கப்பூரர், நேற்று முன்தினம் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. அவருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது.
அவர் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் ‘கார்டியோ - ரெஸ்பிரேட்டரி’ பிரச்சினை என்று தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் வீட்டில் அசைவின்றிக் கிடந்த அவர், செங்காங் பொது மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு கிருமித்தொற்று இருந்தது அங்கு உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு இருந்தாலும் வேறு காரணங்களால் உயிரிழந்த 13வது நபர் இவர்.
இந்தியாவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த இந்திய நாட்டவர் இருவர், பிலிப்பீன்சிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த சிங்கப்பூரர் ஒருவர் ஆகிய மூவருக்கும் கிருமித்தொற்று இருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் சிங்கப்பூருக்கு வந்த பின் இல்லத் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்.
நேற்று எண் 12 கியன் டெக் கிரசென்டில் இருக்கும் ஊழியர் தங்கு விடுதியில் புதிய கிருமித்தொற்று குழுமம் ஒன்று அறிவிக்கப்பட்டது.
நேற்று சமூகத்தில் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 9 பேரில் மூவர் ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்புடையவர்கள்; அறுவரின் கிருமித்தொற்று தொடர்பு பற்றி விசாரணை தொடர்கிறது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 14ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 8ஆக இருந்தது.
ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 6ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.