உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் 8 போலிசாரை சுட்டுக்கொன்ற ரவுடி விகாஸ் துபே, இன்று காலை போலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜைனி மகாகாளி கோவில் விகாஸ் துபேயை கைது செய்த போலிசார் அவனை கான்பூருக்கு கொண்டு செல்லும் வழியில் அவர்கள் சென்ற வாகனம் இன்று காலை கவிழ்ந்தது.
அந்த சமயத்தைப் பயன்படுத்தி, போலிஸ் ஒருவரின் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தப்ப முயன்ற விகாஸ் துபேயை போலிசார் சுட்டுப் பிடித்தனர்.
விகாஸ் துபேயின் மார்பில் 3 குண்டுகள், கையில் ஒரு குண்டு பாய்ந்ததாகக் கூறப்பட்டது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விகாஸ் துபே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவத்தில் நான்கு போலிசார் காயமடைந்ததாகக் கூறப்பட்டது.
60க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடைய விகாஸ் துபேயை கைது செய்வதற்காக, கடந்த 3ம் தேதி கான்பூர் அருகில் உள்ள பிக்ரு கிராமத்திற்கு போலிசார் சென்றிருந்தபோது ரவுடிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதில், டிஎஸ்பி உள்ளிட்ட 8 போலிசார் உயிரிழந்தனர். போலிசார் நடத்திய தாக்குதலில் 2 ரவுடிகள் இறந்தனர்.
தப்பி ஓடிய விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை போலிசார் தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்காக 20 போலிஸ் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. உத்தரப் பிரதேசம், அரியானா, டெல்லி, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் போலிசார் கண்காணித்து வந்தனர். இதனால், விகாஸ் துபே அடிக்கடி தனது இருப்பிடத்தை மாற்றி தலைமறைவாக இருந்தான்.
விகாஸ் துபேயின் கூட்டாளிகள் 3 பேர் அடுத்தடுத்து சுட்டுக் கொல்லப்பட்டநிலையில், மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மகாகாளி கோவிலுக்கு மாஸ்க் அணிந்து சென்ற விகாஸ் துபேயை போலிசார் நேற்று காலை கைது செய்தனர்.