தேர்தலில் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாதபோதிலும் சிங்கப்பூ ரெங்கும் உள்ள குடியிருப்பாளர்களுக்கு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி தொடர்ந்து சேவையாற்றும் என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டாக்டர் டான் செங் போக் உறுதி அளித்துள்ளார்.
“மக்களுக்கு சேவையாற்றுவதில் எனக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை. நான் மருத்துவராக பணியாற்றியபோது என்னிடம் வந்த நோயாளிகள் அனைவருக்கும் நான் சேவையாற்றினேன்.
“உயர் கல்வி பெற்றவர்கள்
சமுதாயத்துக்கு தங்களால் இயன்ற வழிகளில் உதவ வேண்டும். இது அவர்களது சமூகப் பொறுப்பு என்பது எனது கருத்து. நாங்கள் தொடர்ந்து சேவையாற்றுவோம். சேவையாற்றும் மனப்பான்மையைக் கொண்டிருக்க வேண்டும் என எனது கட்சியினருக்கு வலியுறுத்தியுள்ளேன்,” என்று டாக்டர் டான் தெரிவித்தார். நடந்து முடிந்த தேர்தலில் வெஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியில் நூலிழையில் தோற்றபோதிலும் அத்தொகுதியில் டாக்டர் டான் தலைமையில் போட்டியிட்ட சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி அணி அங்குள்ள குடியிருப்பாளர்களை நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
போட்டியிட்ட இடங்களில் குடியிருப்பாளர்கள் சந்திப்பு போன்ற திட்டங்களைச் செயல்படுத்த திட்டமிட்டிருப்பதாக சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி கூறியது. தேர்தலில் கட்சியின் செயல்பாடு குறித்து கட்சி மறுஆய்வு செய்யும் என்று தெரிவித்த டாக்டர் டான், அதன் பிறகு சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி மாறுபட்ட, மேலும் வலிமைமிக்க கட்சியாக இருக்கும் எனக் கூறினார்.