தாம் இன்னும் காதல் வயப்படவில்லை என்கிறார் நடிகை மேகா ஆகாஷ்.
மேலும், அண்மைய பேட்டி ஒன்றில் ஒரு பெண்ணைக் கவர ஆண்கள் என்னவெல்லாம் செய்தால் பலன் கிடைக்கும் என்பதற்கான குறிப்புகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
கவுதம் மேனன் இயக்கிய ‘ஒரு சான்ஸ் கொடு’ இசைத்தொகுப்பில் நடித்துள்ள இவர், கவுதமின் அனைத்துப் படைப்புகளிலும் தாம் இடம்பெற வேண்டும் என விரும்புவதாகக் கூறுகிறார்.
இந்த இசைத்தொகுப்பை ‘யுடியூப்’ தளத்தில் மட்டும் இருபது லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். ரசிகர்கள் அளித்துள்ள இந்த ஆதரவு மிகுந்த உற்சாகமளிப்பதாக சொல்கிறார் மேகா.
“நான் யாரையேனும் காதலிக்கிறேனா என்று ரசிகர்களும் நெருக்கமான சிலரும் அவ்வப்போது கேட்பதுண்டு. எல்லோரது வாழ்க்கையிலும் காதல் நிச்சயம் இருக்கும். அம்மா, அப்பா என்று நம்மை நேசிக்கும் அனைவரையும் காதலித்துக்கொண்டுதானே இருக்கிறோம்.
“என் வாழ்விலும் காதல் உண்டு. காதல் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு. சில சமயம் யாரையேனும் சந்திக்க நேர்ந்தால் சில நொடிகளாவது அவர்களைப் பார்க்கத் தோன்றும். எனினும் இதுபோன்ற கண்டதும் காதல் என்பதில் எனக்கு விருப்பமில்லை. ஒருவரை பார்த்துப் பழகிய பிறகுதான் காதல் வரும். அப்படி வருவதுதான் நல்லது,” என்று சொல்லும் மேகா பெண்களின் மனதைக் கவர்வது அவ்வளவு சுலபமில்லை. என்கிறார்.
ஆண்களுக்கு இது தொடர்பாக சில குறிப்புகளையும் தெரிவித்துள்ளார்.
“எப்போதுமே பெண்களை சொன்ன நேரத்துக்குச் சந்தித்து விடுங்கள். காத்திருக்க வைக்காதீர்கள். யாராக இருந்தாலும் காத்திருத்தல் என்பது எரிச்சலைத் தரும்.
“அவ்வப்போது காதலிக்கும் பெண்ணை ஏதேனும் செய்து ஆச்சரியப்படுத்தப் பாருங்கள். அது உங்கள் மீதான அன்பையும் காதலையும் அதிகரிக்கும். பிறந்த நாளுக்கு மட்டுமல்ல, சின்னச் சின்ன விஷயங்களுக்காக அவ்வப்போது ஏதேனும் பரிசளியுங்கள்.
“அடுத்து முக்கியமாக தினமும் நேரத்துக்குச் சாப்பிட்டாயா, ஏன் சோர்வாக இருக்கிறாய்? உனக்கு என்ன ஆயிற்று என்று விசாரிக்க மறக்கவேண்டாம்,” என்று பெரிய பட்டியலை வாசிக்கும் மேகா, எந்தெந்த விஷயங்களை செய்யக்கூடாது என்பதையும் பட்டியலிடுகிறார்.
இளம் பெண்களை மற்றவர்களுடன் ஒப்பிடக்கூடாது என்பதுதான் மிக முக்கிய குறிப்பாம். அதேபோல் கடந்த கால வாழ்க்கையைப் பேசுவது, குறிப்பாக முன்னாள் தோழி குறித்து பேசுவது தவிர்க்கப்பட வேண்டுமாம்.
பெண்களை லேசாக எடைபோட்டுவிடக்கூடாது என்பதுடன், ‘அதைச் செய்யாதே இதைச் செய்யாதே’ என உத்தரவிடுவதும் கூடாது என்கிறார்.
“நான் இதுவரை யாரையும் காதலித்ததில்லை. இதுவரை நான் பார்த்த ஆண்களில் காதலிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது இந்தி நடிகர் ஷாருக்கான். அவரைப்போல் அழகான ஆணைப் பார்த்ததில்லை.
“இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ். டோனியையும் ரொம்பப் பிடிக்கும். ஆனால், அதை காதல் என்று சொல்ல முடியாது. இந்தியாவுக்காக அவர் விளையாடத் தொடங்கியது முதலே ரசிகையாகி விட்டேன்,” என்கிறார் மேகா ஆகாஷ்.
சிறு வயது முதலே இவருக்கு நடிப்பில்தான் ஆர்வம் அதிகமாம். பள்ளி, கல்லூரியில் இவரது இந்த விருப்பத்தைக் கேட்டு சக மாணவிகள் கிண்டல் செய்வார்களாம். தனது குடும்பத்தார்கூட தாம் நடிகையானதை எதிர்பார்க்கவில்லை என்கிறார்.
“நடிகையாக வேண்டும் என்று நான் சொன்னபோதெல்லாம் ஏதோ விளையாட்டுக்காகப் பேசுவதாக என் அம்மாகூட நினைத்தார். கல்லூரியில் படிக்கும்போது மாடலிங் வாய்ப்புகள் தேடிவந்தன.
“அதே துறையில் நீடிக்குமாறு தோழிகள் கூறினர். ஆனால் அப்போதும் நடிகையாவதுதான் என் விருப்பம் என்று சொன்னேன். அதை இப்போது சாதித்துக் காட்டியுள்ளேன்,” என்கிறார் மேகா.
தமிழில் தொடர்்ந்து கவனம் செலுத்தப் போவதாகக் குறிப்பிடுபவர், நல்ல கதைகள் அமைந்தால் எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் கால்ஷீட் தரத் தயார் என்கிறார்.
“தமிழ் ரசிகர்களின் அன்பும் ஆதரவும் எப்போதும் நீடிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். பிற மொழிப் படங்களிலும் நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன். ரசிகர்களை மகிழ்விப்பதே எனது குறிக்கோள்,” என்கிறார் மேகா ஆகாஷ்.