சிட்னி/தோக்கியோ: கொவிட்-19 கிருமித்தொற்றின் இரண்டாவது அலை தாக்கவுள்ளதாக அஞ்சி ஆசிய நாடுகள், தங்களின் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.
ஆஸ்திரேலிய மாநிலங்கள் எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளன. உல்லாச விடுதிகளுக்குச் செல்வதிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அண்மையில் பொதுமக்களுக்காக திறந்துவிடப்பட்ட ஹாங்காங் டிஸ்னிலேண்ட், மீண்டும் மூடத் தயாராகிறது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் தொடர்புகளின் தடங்களை அறியும் பணியில் ஜப்பான் தீவிரமாக இறங்கியுள்ளது.
கிருமித்தொற்றைக் கட்டுப் படுத்திவிட்டதாக தொடக்கத்தில் பாராட்டுதலைப் பெற்ற சில நாடுகள், மீண்டும் தங்களின் பொருளியல் திறப்பை நிறுத்தி வைப்பது குறித்துப் பரிசீலிக்கின்றன.
விரைந்து, கடுமையான கிருமித் தடுப்பு நடவடிக்கைகளை நடப்புக்குக் கொண்டு வந்த ஆஸ்திரேலியா, அதிகளவிலான கிருமித்தொற்று சம்பவங்களையும் உயிரிழப்புகளையும் தவிர்த்துவிட்டது. இருப்பினும் விக்டோரியா மாநிலத்தில் அதிகமாகப் பதிவாகும் சமூகக் கிருமிப் பரவல் சம்பவங்களும் நியூ சவுத் வேல்சில் அதிகரிக்கும் புதிய சம்பவங்களும் கவலை தருவதாக உள்ளன.
ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்கள் உட்பட 20 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நிகழ்ச்சி நடைபெற்ற அரங்கத்தில் பார்வையாளர்களாக வந்திருந்த 800க்கும் மேற்பட்டவர்களை தோக்கியோ சுகாதார அதிகாரிகள் தேடி வருகின்றனர்.
கள்ளக் குடியேறிகள் ஆயிரக் கணக்கில் பிடிபட்டதை அடுத்து தாய்லாந்தும் அதன் எல்லைப் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்கியுள்ளது.
‘பல நாடுகள் தவறான வழியில் செல்கின்றன’
கொவிட்-19 நெருக்கடியைச் சமாளிப்பதன் தொடர்பில் நிறைய நாடுகள் தவறான வழியைக் கையாள்வதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
இதனால் நிலைமை மேலும் மோசமாகும் என்று நேற்று முன்தினம் அதன் தலைவர் டெட்ரோஸ் கெப்ரியேசஸ் எச்சரித்தார்.
உலகளவில் கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் 13 மில்லியனைத் தாண்டிவிட்டதாக அரசாங்க அறிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு ராய்ட்டர்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
ஐந்தே நாட்களில் ஒரு மில்லியன் புதிய கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகின. இதுவரை அரை மில்லியனுக்கு மேலானோர் கிருமி பாதிப்பால் உயிரிழந்துவிட்டனர். இந்நிலையில், கிருமித் தடுப்பு தொடர்பில் அளவுக்கு அதிகமான நாடுகள் தவறான பாதையில் செல்வதால், பழைய நிலைக்குத் திரும்பும் சாத்தியம் வரும் நாட்களில் இல்லை என்று திரு டெட்ரோஸ் தெரிவித்தார்.
எந்த ஒரு நாட்டையும் குறிப்பிட்டுக் கூற விரும்பவில்லை என்று சொன்ன திரு டெட்ரோஸ், “வெளிப்படையாகச் சொல்கிறேன். தவறான வழியில் செல்லும் நாடுகள் மிகப் பல. தொடர்ந்து மக்களின் முதல் எதிரியாக இக்கிருமி உள்ளது. தொற்றைக் கட்டுப்படுத்தும் அடிப்படை நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படாவிட்டால், இத்தொற்று நோய் ஒரே வழியில்தான் போகும். அதாவது மேலும் மோசமாகிக் கொண்டே போகும்,” என்றார்.