சுதாஸகி ராமன்
இலையுதிர் காலத்தில் தென் கொரியாவின் எழில் கொஞ்சும் தோற்றத்தையும் அதன் கலாசாரத்தையும் பின்னணியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட குறும்படமான 'ஹான்', அண்மையில் நடைபெற்ற தேசிய இளையர் திரைப்பட விருது நிகழ்ச்சியில் 'டிபிஎஸ்' சிறந்த படத்திற்கான விருதைத் தட்டிச் சென்றுள்ளது. பல தலைமுறைகளாக கொரியர்களிடையே வியாபித் திருக்கும் தீர்க்கப்படாத வருத்தமும் விளக்க முடியாத சோகமுமான உணர்வு கொரிய மொழியில் 'ஹான்' எனப் படுகிறது. குறும்படத்தின் மூலம் இந்த உணர்வைச் சித்திரிக்க முற்பட்டிருக்கிறார் படத்தின் இயக்குநர் ஜானத்தன் சூ.
மகனுடைய கவனக்குறைவால் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கி மாண்டுபோன கொரிய பெண்ணின் பெற்றோரைக் காண சிங்கப்பூரிலிருந்து தென் கொரியா வரை செல்லும் ஒரு தந்தையின் கதையை மைய மாகக்கொண்டு எடுக்கப்பட்டது 'ஹான்'. பார்ப்பவர் மனங்களை நெகிழவைக்கும் இந்தக் குறும் படம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் படத் தயாரிப்புத் துறையில் பட்டக் கல்வி மேற்கொண்ட நான்காம் ஆண்டு மாணவர்கள் ஆறு பேருடைய இறுதி ஆண்டு ஒப் படைப்பாக உருவாக்கப்பட்டது. தந்தை, மகன் இருவருக்குமிடையே உள்ள உறவு, 'ஹான்' உணர்வு, ஆகிய இரண்டையும் பற்றி குறும்படம் எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இதைக் கருவாகக் கொண்டு படத்தை உருவாக்கினார் இயக்குநர் ஜானத்தன்.
'ஹான்' உணர்வை தத்ரூபமாகப் படம்பிடிக்கும் நோக்கில் கொரியாவிற்குச் சென்று கொரிய கலாசாரத்தின் சில அம்சங்களைப் படத்தில் பொருத்த எண்ணினார் அவர். சிங்கப்பூரிலும் குறும்படத்தின் சில காட்சிகள் எடுக்கப் பட்டன. இதைத் தொடர்ந்து குறும்படத்தின் தயாரிப்பாளரான ஷாமினி குணசேகரன் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
சிறந்த படத்துக்கான விருதினைப் பெற்ற 'ஹான்' குறும்படத்தின் இயக்குநர் ஜானத்தன் சூ, அதன் தயாரிப்பாளர் ஷாமினி குணசேகரன் (வலது). அதே படத்துக்கு சிறந்த இயக்குநர் விருதை ஜானத்தன் சூ பெற்றார். படம்: தேசிய இளையர் திரைப்பட விருது விழா