சோல்: சக்திவாய்ந்த ஹைட்ரஜன் வெடிகுண்டை வெற்றிகரமாக சோதனை செய்திருப்பதாக வட கொரியா அறிவித்துள்ள நிலையில் அது உண்மையாக இருந்தால் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் சேர்ந்து வடகொரியாவுக்கு சரியான பதிலடி கொடுக்கவிருப்பதாக அந்த நாடுகள் அறிவித்துள்ளன.
புதன்கிழமை சோதனையை மேற்கொண்டதாக வடகொரியா அறிவித்தது. அது உண்மையாக இருந்தால் வடகொரியா மேற் கொண்டுள்ள நான்காவது அணுவாயுத சோதனை அது. சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையில் இது முதலாவதாகும். வடகொரியாவின் அறிவிப்பைத் தொடர்ந்து அவசரமாகக் கூடிய ஐநா பாதுகாப்பு மன்றம், வடகொரியாவுக்கு எதிராக புதிய நடவடிக்கைகள் எடுக்க இணங்கியுள்ளது.
ஆனால் வடகொரியா அத்தகைய சோதனையை மேற்கொண்டதா என்பது பற்றி இன்னமும் சந்தேகம் நீடிக்கிறது. வடகொரிய விவகாரம் குறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா, தென்கொரிய அதிபர் பார்க் கியன் ஹையுடனும் ஜப்பானியப் பிரதமர் ஷின்சோ அபேயுடனும் தனித்தனியாக பேச்சு நடத்தியதாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. அந்த மூன்று நாடுகளும் சேர்ந்து வடகொரியாவுக்கு சரியான பதிலடி கொடுக்க மூன்று தலைவர்களும் இணங்கியதாகவும் வெள்ளை மாளிகை அறிக்கை தெரிவித்தது.