கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் இணையம் வழி வகுப்புகளை நடத்தி வருகின்றன.
ஆனால், இதில் பங்கேற்க கைபேசி மற்றும் இணைய வசதி இல்லாமல் வசதியற்ற மாணவர்கள் தவிக்கின்றனர்.
இந்நிலையில் ஏழை மாணவிக்கு நவீன ஐஃபோன் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார் நடிகை டாப்சி.
கர்நாடகாவைச் சேர்ந்த அந்த மாணவி விரைவில் நடைபெற உள்ள மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வை எழுத தயாராகி வருகிறாராம். அவரது கல்விக் கட்டணத்தைப் பல இடங்களில் கடன் வாங்கி செலுத்தி உள்ளார் அவரது தந்தை. வீட்டில் இருந்த நகைகளையும் விற்றுவிட்டாராம்.
இந்நிலையில் நன்கு படிக்கக்கூடிய அந்த மாணவி ‘ஆன்லைன்’ வகுப்புகளில் பங்கேற்க திறன் பேசி இல்லாமல் தவிப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. இதையடுத்து அம்மாணவிக்கு ஐஃபோன் ஒன்றைப் பரிசளித்துள்ளார் டாப்சி.
“பெண்கள் அதிகம் படிக்க வேண்டும். இந்தச் சமூகத்தில் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி என்பது அவசியம். இன்றைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு அதிக மருத்துவர்கள் தேவை. அதைச் சாத்தியமாக்குவதற்கான ஒரு சிறு முயற்சியே என்னுடைய இந்த உதவி,” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ள டாப்சிக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.