உலக அளவில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் ஆண்களின் உருவமே காட்சிப்படுத்தப்பட்டு வந்த நிலையில், இந்தியாவின் மும்பையில் முதன் முறையாக பெண் உருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைவரையும் உள்ளடக்கும் நடைமுறையில் இது ஒரு முக்கியமான படி என பெண்கள் உரிமை ஆர்வலர்கள் இதனை வரவேற்றுள்ளனர்.
மும்பையில் 100க்கு மேற்பட்ட பச்சை, சிவப்பு நிற போக்குவரத்து சமிக்ஞை விளக்குகளில் ஆண் உருவத்துக்குப் பதிலாக பெண் உருவம் மாற்றப்பட்டுள்ளது.
“நகரின் தன்மையை இந்த சமிக்ஞை மாற்றம் பிரதிபலிக்கிறது. பாலின சமத்துவத்தில் இந்த நகரம் நம்பிக்கைகொண்டுள்ளதையும் பெண்களின் அதிகாரத்தையும் குறிப்பிடுகிறது,” என மும்பை நகராட்சியின் துணை ஆணையர் கிரன் திகவ்கர் கூறினார்.
“இது ஒரு தொடக்கம்தான்,” என தாம்சன் ராய்ட்டர்ஸ் அறநிறுவனம் தெரிவித்துள்ளது.
இது சிறியதொரு மாற்றம் என்றாலும் மிகவும் சக்தி வாய்ந்தது என பெண்கள் உரிமை ஆர்வலர்கள் கருத்துரைத்துள்ளனர்.
பொதுப் போக்குவரத்தில் பெண்களுக்கு இலவச சலுகையை டெல்லி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. போக்குவரத்து, பாதுகாப்பு போன்ற காரணங்களால் பெண்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்ற நோக்கில் பல மாநிலங்களில் பெண்களுக்காக இலவச சைக்கிள்கள் வழங்கப்படுகின்றன.