சென்னை: தேவையான பொதுப் போக்குவரத்து வசதிகள் ஏதும் இல்லாத நிலையில், வங்கிகளில் பணிபுரியும் 100% ஊழியர்களும் பணிக்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று கூறியுள்ளனர் வங்கி ஊழியர்கள்.
வங்கிகளில் 100% ஊழியர்கள் பணிக்கு வரவேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, வரும் 20ஆம் தேதி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய உள்ளதாக தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்த கூட்டமைப்பின் பொதுச் செயலர் இ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் வரும் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்கு வரத்துகளும் இயக்கப்படாத நிலையில், வெளியூர்களில் வசிப்பவர்கள் பணிக்குத் திரும்புவது சிரமம்.
“அத்துடன், வங்கிகள் 100% ஊழியர்களுடன் வழக்கம்போல செயல்பட்டால் கிருமித்தொற்று பரவும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே, வங்கியின் பணி நேரத்தைக் குறைக்கவேண்டும், 50% ஊழியர்கள் மட்டும் பணிக்கு வர அனுமதிக்கவேண்டும்.
“வங்கி ஊழியர்களுக்காக சிறப்புப் பேருந்து சேவையை ஏற்படுத்தித் தரவேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடத்த உள்ளோம்,” என்று கூறப்பட்டுள்ளது.