வாஷிங்டன்: வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் டோனல்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் களத்தில் உள்ளார்.
இந்தத் தேர்தலில் வெளிநாட்டு சக்திகள் ஊடுருவி தேர்தல் முடிவை மாற்ற முயற்சி செய்து வருகின்றன.
குறிப்பாக ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் அமெரிக்க தேர்தலில் தலையிட முயற்சி செய்வதாக அமெரிக்காவின் உளவுத் துறையைச் சேர்ந்த உயர்மட்ட அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.
“மூன்று நாடுகளும் இணையம் வழியாக தவறான தகவல்களை பரப்பி வாக்காளர்களிடம் தங்களின் செல்வாக்கை செலுத்த முயற்சி செய்கின்றன,” என்று தேசிய உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு நிலையத்தின் இயக்குநர் வில்லியம் இவானினா கூறியுள்ளார்.
“தேர்தலில் அதிபர் டிரம்ப் வெற்றி பெறக் கூடாது என்பது சீனாவின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜோ பைடன் தேர்தலில் வெற்றி பெறக் கூடாது என்பது ரஷ்யாவின் விருப்பமாக உள்ளது,” என்று அவர் கூறினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
இதற்கிடையே வெள்ளிக் கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உளவுத் துறையின் அறிக்கை பற்றி அதிபர் டிரம்ப்பிடம் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், தனது நிர்வாகம் அதனை அணுக்கமாக ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.
அஞ்சல் வாக்குகளால் அதிபர் தேர்தலில் மோசடிகள் நடைபெறலாம் என்று டிரம்ப் கூறியுள்ள வேளையில் உளவுத் துறையின் அறிக்கை வெளியாகியுள்ளது.
வெளிநாடுகள் வாக்காளர்களின் வாய்ப்புகளை மாற்றி கொள்கைகளில் தலையிட்டு ஜனநாயகத்தின் மீது அமெரிக்க மக்களுக்கு உள்ள நம்பிக்கையை கீழறுக்க முயற்சி செய்கின்றன என்று மேலும் திரு வில்லியம் இவானினா குறிப்பிட்டார்.