சென்னை: திமுகவில் பலர் மன உளைச்சலில் இருக்கின்றனர் என்று திமுகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தலைமை நிலைய செயலாளரும் ஆயிரம் விளக்கு தொகுதி எம்எல்ஏவுமான கு.க. செல்வம் கூறியுள்ளார்.
ஹலோ எஃப்எம் வாெனாலிக்கு நேற்று பேட்டியளித்தபோது அவர் இதனை தெரிவித்ததாக தமிழக ஊடகம் ஒன்று கூறியது.
“நான் ஒரு ஆன்மிகவாதி, ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை எனது தொகுதியின் கோரிக்கை தொடர்பாக சந்திக்கவே டெல்லி சென்றேன்.
அப்போது மரியாதை நிமித்தமாக பாரதிய ஜனதா தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து ராமர் கோவில் கட்டும் நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்தேன்,” என்று அவர் கூறி உள்ளார்.
மேலும் பேசிய கு. க. செல்வம், அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி உட்கட்சித் தேர்தலில் தன்னை அழைத்து ஜெ.அன்பழ கனுக்காக கட்சி பதவியை விட்டுத் தர கேட்டுக்கொண்டதால் அப்போது விட்டுத்தந்தேன் என்றும் தற்போது அவரது பேரனுக்காகவும் விட்டுக் கொடுக்க சொன்னால் எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
“என்னை போன்றவர்களுக்கும் பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காதா? என்று அவர் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
திமுகவில் நடக்கும் பல விஷயங்களை பொது வெளியில் தெரிவிக்க போவதாகவும் தன்னை போல் மன உளைச்சலில் இருக்கும் பலர் கட்சியை விட்டு வெளியேற உள்ளதாகவும் அவர் கூறினார்.
திரு கு.க. செல்வத்தின் கருத்து திமுகவில் புதிய பிரச்சினையை கிளப்பியுள்ளது.
இதற்கிடையே திமுகவில் இருந்து தற்காலிக நீக்கத்தை மீட்டுக் கொள்ள வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு கு.க.செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
“தங்களுடைய 5-8-2020 தேதி யிட்ட கடிதம் கிடைக்கப்பெற்றது. கிடைத்த ஏழு நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் பதில் அளிக்கவில்லை என்றால் நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், நட வடிக்கை எடுத்து என்னை தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளீர்கள்.
“ஆகவே, என் பதில் கிடைக்கும் முன்னரே நான் குற்றவாளி என்று ஒருதலைபட்சமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
“ஆகவே தங்களின் தற்காலிக நீக்கத்தை மீட்டுக் கொள்ள கேட்டுக்கொள்கிறேன். சட்டப்படி விசாரணை வைத்தால், விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருக்கிறேன்,” என்று அந்த கடிதத்தில் கு.க.செல்வம் தெரிவித்துள்ளார்.