இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு தொடர்பான விவரங்களை சிபிஐ வசம் ஒப்படைக்கவும் மும்பை போலிசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகக் கூறப்பட்டாலும் அது கொலை என்கிற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது சொந்த மாநிலமான பீகார் மாநில அரசும் மகாராஷ்டிரா மாநில அரசும் விசாரணை நடத்தின.
இதில் இரு மாநில அரசுகளிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர், சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது பீகார் அரசு. இதற்கு மகாராஷ்டிரா அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இதனிடையே சுஷாந்த் சிங்கின் காதலி நடிகை ரியா சக்கரவர்த்தி மீது பீகார் போலிசில் புகார் செய்யப்பட்டது. ரியா சக்கரவர்த்தி உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. அமலாக்கப் பிரிவு முன்பும் ரியா விசாரணைக்கு ஆஜராகி இருந்தார்.
இந்நிலையில், தம் மீது பீகார் போலிசார் பதிவு செய்துள்ள வழக்குகளை மும்பைக்கு மாற்றக் கோரி உச்சநீதிமன்றத்தில் ரியா மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் இன்று விசாரித்தது.
அப்போது, சுஷாந்த் சிங் மரண வழக்கை சிபிஐ விசாரிக்கலாம் என்றும் வழக்கு விவரங்களை மும்பை போலிஸ், சிபிஐக்கு வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.