கொவிட்-19 சூழலில் அனைத்து வயதினரும் ஏதோ ஒரு காலகட்டத்தில் வீட்டில் அடைந்து கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. வேலை, படிப்பு என்று பலருக்கும் இந்த நெருக்கடி காலத்தில் வீட்டில் இருந்தவாறே பொழுதைக் கழிக்க ஓர் உல்லாசத் தளமாக விளங்குகிறது, ‘நெட்ஃபிளிக்ஸ்’. இன்றைய இளைஞர்களிடையே மிகப் பிரபலமாகி இருக்கும் இந்தச் சேவைத் தளம் குறைந்தது 182 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்றுள்ளதாக ‘நியூ யார்க் டைம்ஸ்’ தெரிவித்தது.
இங்கு பத்தில் ஒன்பது இளைஞர்கள் ‘நெட்ஃபிளிக்ஸ்’ போன்ற தளங்கள் வழி திரைப்படங்களையும் நிகழ்ச்சிகளையும் பார்க்கின்றனர் என்று ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவ்வாறு இளையர்கள் ‘நெட்ஃபிளிக்ஸ்’ தளத்தில் பார்க்க வேண்டிய ஐந்து தமிழ்ப் படங்களின் பட்டியல்:
சில சமயங்களில்
ஒரு மருந்தகத்தில் ‘எய்ட்ஸ்’ நோய்க்கான பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கும் ஏழு பேர் இடையே நடக்கும் உரையாடல்களையும் அவர்களின் உணர்ச்சிகளையும் மனதை வருடும் வகையில் காட்டியுள்ளார் பட இயக்குநர். ஏழு கதாபாத்திரங்களில் ஒருவருக்கு எயிட்ஸ் உள்ளதாகக் கூறியதை அடுத்து படத்தில் ஒரு திருப்புமுனை ஏற்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு
இக்கதை ஓர் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவானது. இரும்புக்கடையில் பணியாற்றும் லாரி ஓட்டுநர் ஒருவர் வேலை செய்யும் இடத்தில் தவறாக வந்து இறங்குகிறது இரண்டாம் உலகப் போரில் தயாரிக்கப்பட்டு, அழிக்கப்
படாமல் கடலில் மூழ்கடிக்கப்பட்ட ஒரு வெடிகுண்டு. இந்தக் குண்டு யாரிடமும் ஆதாரமாகக் கிடைக்கக்கூடாது என அரசியல் பலத்துடன் களமிறங்கும் அணி ஒரு பக்கமிருக்க, இந்தத் திட்டத்தை அம்பலப்படுத்தத் துடிக்கும் ரான்யா எனும் கதாபாத்திரம் இன்னொரு பக்கம்.
வெடிக்கக்கூடிய குண்டிலிருந்து அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட்டார்களா என்பதுதான் கதை.
சில்லுக்கருப்பட்டி
நான்குக் கதைகளைச் சொல்லி, அவற்றின் இடையேயுள்ள பொதுவான கருவை சுவாரசியமாக காட்டியிருக்கிறார் இயக்குநர். மனித வாழ்வின் நான்கு கட்டங்களில் மலரும் காதலின்/அன்பின் புரிதலை எதார்த்தமாக எடுத்துச் செல்கிறது படம்.
கே.டி.(எ) கருப்புதுரை (KD)
முதுமை காலத்தில், உறவுகளால் ஒதுக்கப்பட்ட அறுபதைக் கடந்தவர் ஒருவரும் இளம் பருவத்திலேயே கைவிடப்பட்ட ஒரு சிறுவனும் சந்தித்துக்கொள்கின்றனர்.
தம்மை வளர்த்த பிள்ளைகள் தம்மைக் கொல்ல நினைக்கிறார்களே எனும் வேதனையில் வாடும் கருப்புதுரை என்ற அந்த முதியவர், ‘குட்டி’ என்ற அந்தச் சிறுவனின் அன்பில் நெகிழ்ந்து போகிறார்.
உறவு என்றால் எப்படி இருக்க வேண்டும், முதியவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் போன்றவற்றை நகைச்சுவையுடன் நயம்பட உணர்த்துகிறது இப்படம்.
ஒத்த செருப்பு அளவு 7
இந்த படத்தில் ‘மாசிலாமணி’ என்ற முதன்மை கதாபாத்திரம் மட்டுமே திரையில் தோன்றியிருப்பார். காவலாளியாக பணிபுரியும் நடுத்தர வயதுடைய மாசிலாமணி, கொலைக் குற்றவாளி என்ற சந்தேகத்தின் பெயரில் காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகிறார். படத்தின் மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் மாசிலாமணியுடன் உரையாடும் குரல்களாகவே சித்திரிக்கப்படும். விசாரணை கேள்விகளுக்கு விடை கூறும் வகையில் நடந்த நிகழ்வுகளை மாசிலாமணி கதாபாத்திரம் நடித்துக் காட்டும் பாணி மிகவும் சுவாரசியமானது.
படங்கள்: இணையம்