மின்னசோட்டா: தனியார் பாதுகாவலர் சீருடையணிந்த ஒருவர் மின்னசோட்டாவில் உள்ள கடைத்தொகுதி ஒன்றில் எட்டுப்பேரை கத்தியால் குத்தினார். ஓய்வில் இருந்த போலிஸ் அதிகாரி ஒருவர் அவரை சுட்டுக் கொன்றார். 'கிராஸ்ரோட்ஸ் சென்டர்' கடைத்தொகுதியில் நேற்று முன்தினம் வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்த இரவு வேளையில் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்பட்டது. காயமுற்ற அனைவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். காயமுற்றவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை எனவும் அவர்கள் தேறிவருவதாகவும் மருத்துவமனையின் தொடர்பு நிபுணர் கிரிஸ் நெல்சன் சொன்னார்.
கத்தியால் குத்திய நபர் தனியாகச் செயல்பட்டதாக அந்தப் பகுதியின் போலிஸ் தலைவர் வில்லியம் பிளேர் ஆண்டர்சன் கூறினார். அது பயங்கரவாதத் தாக்குதலா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் இல்லை என்றார் திரு ஆண்டர்சன். கத்திக் குத்துக்கான நோக்கத்தை அறியவும் சம்பவத்தின் பின்னணியை அறியவும் விசாரணை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நண்பர்களுடன் கடைத் தொகுதிக்குச் சென்றிருந்த மாணவர் ஒருவர் கத்திக்குத்து சம்பவம் பற்றி விவரித்தார். ஒருவரது முகத்திலும் மற்றவரது முதுகிலும் கத்திக்குத்தால் ரத்தம் வழிந்தோடியதைக் கண்டதாக அவர் சொன்னார்.