புதுவை: புதுச்சேரியின் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி நேற்று முன்தினம் காவல்துறையினருடன் சேர்ந்து சைக்கிளில் சுற்றுக் காவல் மேற்கொண்டார். அப்போது சாலையோரம் கால்வாயில் குப்பை கொட்டப்பட்டிருந்ததைக் கவனித்த அவர், தம்முடன் வந்த உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷிடம் விளக்கம் கேட்டார். புதுச்சேரி காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபடுவதற்காக சில நாட்களுக்கு முன்பு சைக்கிள்கள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு, தூய்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த சைக்கிள் பயணத்தை அவர் மேற்கொண்டார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் தொடங்கிய இந்த சைக்கிள் சுற்றுக்காவல், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடற்கரைச் சாலை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது. முடிவில் பேசிய கிரண்பேடி, "தூய்மை, பாதுகாப்பு இந்த இரண்டும் புதுச்சேரியின் அடையாளமாக இருக்க வேண்டும்," என்று வலியுறுத்தினார்.
அங்கு ஏன் குப்பையாக இருக்கிறது என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பிய கிரண்பேடி (இடது). படம்: ஊடகம்