கான்பூர்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நாளை தொடங்குகிறது. இந்தத் தொடரை எப்படியும் கைப்பற்றவேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் இந்திய அணி அதற்குத் தேவையான வியூகங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில், நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர்களை ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்த விடமாட்டோம் என்று இந்திய வீரர் ரகானே சூளுரைத்துள்ளார். "கான்பூர் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாக இருக்கும் என்று நம்புகிறோம்.
இப்படிப்பட்ட ஆடுகளங்கள்தான் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஒத்துழைக்கும். இதுதான் எங்கள் பலமும்கூட. எங்கள் பலத்துக்கு ஏற்ப விளையாட வேண்டியது முக்கியமாகும். ஆனால் இப்போது வரைக்கும் கான்பூர் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது தெரியாது. "நியூசிலாந்து அணியில் சோதி, சான்ட்னெர், மார்க் கிரெய்க் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். யாரையும் நாங்கள் எளிதாக எடைபோட்டுவிடமாட்டோம். அவர்கள் மீது மரியாதை வைத்திருக்கிறோம். அதே நேரத்தில் இந்தச் சுழற்பந்து வீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்தவிடாமல் தடுப்பதே எங்களது திட்டமாகும்," என்று ரகானே தெரிவித்தார்.