திருவனந்தபுரம்: குளிக்கும்போது பானைக்குள் மாட்டிக்கொண்டு அழுது ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு வயது குழந்தையை எடுக்க அந்தப் பானையை இரண்டாக வெட்டிப் பிளந்து தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம், ஆலப்புழாவை அடுத்த ஆலுவாவைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி திவ்யா. இவர்களுக்கு நிரஞ்சனா என்ற இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. ஒவ்வொரு நாளும் காலையில் நிரஞ்சனாவை அவரது தாயார் வீட்டின் பின்பகுதி யில் வைத்து குளிப்பாட்டுவார். எவர்சில்வர் பானையில் தண்ணீரைக் கொண்டு வந்து அதைக் குழந்தையின் தலையில் ஊற்றிக் குளிப்பாட்டுவது வழக்கம்.
நேற்றும் இதே போன்று குழந் தையைக் குளிப்பாட்ட திவ்யா பானையில் தண்ணீர் எடுத்து வந் தார். அதனை வீட்டின் பின்பகுதி யில் வைத்துவிட்டு குழந்தையை குளிப்பாட்ட அழைத்துச் சென்றார். பானையின் அருகே குழந்தையை அமர வைத்துவிட்டு சமையல் அறைக்குச் சென்ற திவ்யா, திரும்பி வருவதற்குள் குறும்புக்காரக் குழந்தை பானைக் குள் சென்று அமர்ந்துகொண்டது. பானைக்குள் குழந்தை அமர்ந்திருப்பதை முதலில் ரசித்த தாயார், பின்னர் குழந்தையை வெளியே தூக்கமுயன்றார். ஆனால், குழந்தையின் இடுப்புப் பகுதி பானையின் வளைவில் சிக்கிக்கொண்டது.
இதனால் குழந்தையை பானை யில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை. குழந்தையை இழுத்துப் பார்த்ததில் அதற்கு உடல் வலி ஏற்பட்டு குழந்தை அலறித் துடித்தது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். குழந்தையின் நிலை கண்டு பதறிப்போன அவர்கள் ஆலப்புழா தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்க, பானையை 'கட்டர்' மூலம் ஒருபுறமாக வெட்டி அதற்குள் சிக்கியிருந்த குழந் தையை அவர்கள் பத்திரமாக மீட்டனர்.