ஆட்குறைப்பால் பாதிக்கப்பட்டு உள்ள ஆயிரக்கணக்கான சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (எஸ்ஐஏ) ஊழியர்களுக்கு புதிய வேலை கிடைக்க உதவி வழங்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
இதன் தொடர்பில் அரசாங்கம் தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ், தொழில்துறை பங்காளிகள் ஆகியோருடன் இணைந்து பணியாற்றி, பாதிக்கப்பட்டவர்களை புதிய வேலைகளில் அமர்த்த முனைப்புடன் ஈடுபடும் என்றும் திரு ஓங் நேற்று கூறினார்.
எஸ்ஐஏ தனது ஒட்டுமொத்த ஊழியரணியிலிருந்து 4,300 பேரை ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ளது என்று கூறிய பிறகு, தமது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்துரைத்த அமைச்சர் ஓங், “மிகவும் முக்கியமாக, ஆகாயப் பயணத்தைப் பாதுகாப்பான நிலையில் மீண்டும் இயக்க நாங்கள் தொடர்ந்து முயற்சிகளில் ஈடுபடுவோம். ஆகாயப் போக்குவரத்து மையம் என்ற சிங்கப்பூரில் மதிப்பை மீண்டும் நிலைநாட்டுவோம்,” என்றார்.
ஊழியர் சேர்க்கை நிறுத்தம், முன்னதாகவே பணி ஓய்வு பெறுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்ட பிறகு சிங்கப்பூரிலும் வெளிநாடுகளிலும் உள்ள எஸ்ஐஏ குழுமத்தின் 2,400 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெளிநாட்டினர்.
“வேலை ஆதரவுத் திட்டம் மூலம் அரசாங்கம் விமானத் துறைக்கு ஆதரவளித்துள்ளது. அதனால் முதலாளிகள் ஊழியர்களுக்குக் கொடுக்கும் சம்பளத் தொகை ஈடு செய்யப்படுகிறது. எஸ்ஐஏ இதன்மூலம் தெமாசெக் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் தனது மூலதனத்தைக் குறிப்பிடத்தக்க அளவில் உயர்த்தி இருக்கிறது.
“ஊழியரணி குறைப்பை அவர்கள் முடிந்தவரை தாமதப்படுத்தியிருந்தார்கள். ஆனால், கொவிட் -19 சூழ்நிலையால் இந்த ஆள் குறைப்பு தவிர்க்க முடியாததாகி விட்டது,” என்றும் அமைச்சர் விளக்கினார்.
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்று கூறிய என்டியுசியின் தலைமைச் செயலாளர் இங் சீ மெங், இருப்பினும் எஸ்ஐஏ குழுமத்துடன் பணியாற்றி ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர்களுக்கு என்டியுசி ஆதரவளிக்கும்,” என்றார்.