மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி வி.கே.சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகலாம் என அந்தச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
வருமானத்திற்கு மேல் சொத்துக் குவித்த வழக்கில் சசிகலா, அவருடைய உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2017 பிப்ரவரியிலிருந்து அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, சசிகலா விரைவில் விடுதலையாகலாம் என அவ்வப்போது ஊகச் செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், பெங்களூரு மத்திய சிறைச்சாலை கண்காணிப்பாளர் வெளியிட்ட தகவல் அந்த ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த நரசிம்மமூர்த்தி என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் அந்தத் தகவலைப் பெற்றுள்ளார்.
அதில், “தனக்கு விதிக்கப்பட்ட ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா செலுத்தும் பட்சத்தில் அவர் 2021 ஜனவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படலாம். அவர் அபராதம் செலுத்தவில்லை எனில் 2022 பிப்ரவரி 27ஆம் தேதி விடுவிக்கப்படக்கூடும். இடையில் அவர் பரோலில் வெளியே சென்றால் விடுதலையாகும் தேதி மாறுபடலாம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.