இந்திய நாடெங்கும் உள்ள விமான நிலையங்களில் சென்னை விமான நிலையத்தில் மட்டுமே அதிகளவில் வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாகத் தெரியவந்துள்ளது.
கடந்த 2019-20ஆம் ஆண்டில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கடத்தப்பட்ட தங்கம் தொடர்பான விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
இதன்படி, 2019-20ஆம் ஆண்டுகளில், மொத்தம் ரூ.858 கோடி மதிப்புள்ள 2,629 கிலோ கடத்தல் தங்கம் நாடெங்கும் உள்ள விமான நிலையங்களில் கைப்பற்றப்பட்டன.
இதில், ஆக அதிகமாக சென்னை விமான நிலையத்தில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து ரூ.134 கோடி மதிப்புள்ள 375 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவை நாடெங்கும் பறிமுதலான கடத்தல் தங்கத்தில் பாதி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
வளைகுடா, தெற்கு ஆசிய நாடுகளில் இருந்தே சென்னைக்கு அதிகளவில் தங்கம் கடத்திவரப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
தங்கத்தை இந்தியாவிற்குள் கடத்துவதில் கேரளா முதலிடத்தில் உள்ளதாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது, அங்குள்ள கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் விமான நிலையங்கள் வழியாக 444 கிலோ கடத்தல் தங்கம் கடந்த 2019-20ஆம் ஆண்டில் கடத்தப்பட்டு பிடிபட்டுள்ளது.