கிருமிப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது சட்டவிரோதமாக ஒன்றுகூடிய குற்றத்திற்காக நேற்று 11 ஆடவர்களுக்கு நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது. மொத்த அபராதத் தொகை $25,200.
ஏப்ரல் 7ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை திட்டம் நடப்பில் இருந்தபோது முறையான காரணமின்றி வீட்டிலிருந்து வெளியேறவும் ஒரே பகுதியில் வசிக்காதவர்கள் சமூகக் காரணங்களுக்காக நேரில் சந்திக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.
தடையை மீறி இவற்றைச் செய்வது கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் குற்றம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஈஸ்ட்பே கொண்டோமினியத்தில் ஒன்றுகூடிய குற்றத்தை 11 ஆடவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடு அருகே டே லியன் டெக் ரோட்டில் உள்ள அந்த கொண்டோமினிய வீட்டில் ஒன்றுகூடலுக்கு ஏற்பாடு செய்ததற்காக அலெக்ஸ் டியோ யான் யுவான், 27, என்பவருக்கு ஆக அதிகமாக $3,000 அபராதம் விதிக்கப்பட்டது.
ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்ற டியோ வீ லியாங், 27, என்பவருக்கு $2,700 அபராதமும் இதர மூவருக்கு தலா $2,500 அபராதமும் விதிக்கப்பட்டன. இவர்கள் தவிர 23 வயது முதல் 35 வயது வரையிலான ஆறு பேருக்கு தலா $2,000 அபராதம் விதிக்கப்பட்டது. 12வது நபர் தொடர்பான வழக்கு விசாரணை இன்னும் நிலுவையில் உள்ளது.
அவரது வழக்கிற்கு முந்திய கலந்துரையாடல் அக்டோபர் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் முதல்முறை குற்றம் புரிவோருக்கு ஆறு மாதம் வரையிலான சிறை, $10,000 வரையிலான அபராதம் ஆகியன தண்டனைகளாக விதிக்கப்படலாம்.
மீண்டும் குற்றம் புரிவோருக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும் $20,000 வரையிலான அபராதமும் விதிக்க முடியும்.