லடாக் எல்லைப் பகுதியில் நேரடி மோதலில் ஈடுபடாமல் இந்திய ராணுவத்தை திசைதிருப்பும் தந்திர முறையை சீனா கையாள்வது தெரியவந்துள்ளது.
அண்மைய சில மாதங்களாக இந்திய, சீனா இடையே எல்லையில் மோதல் வலுத்து வருகிறது. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் லடாக் பகுதியில் உள்ள முக்கிய மலை முகடுகளை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் சீன ராணுவத்தின் அடுத்தகட்ட நகர்வுகளை இந்திய ராணுவத்தால் உன்னிப்பாகக் கவனித்து பதில் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும்.
இந்நிலையில் நேரடியாக சண்டையிடாமல் இந்திய வீரர்களை மனதளவில் நிலைகுலைய வைப்பது, இந்திய அரசின் மீது வீரர்களுக்கு அதிருப்தி ஏற்படச் செய்வது போன்ற தந்திர முறைகளை சீனா பின்பற்றுவதாக ஊடகத் தகவல் தெரிவிக்கிது.
பாங்காங் தென்கரையில் சீன ராணுவத்தினர் ஏராளமான ஒலிபெருக்கிகளை வைத்து தெளிவான இந்தியில் சில அறிவிப்புகளை ஒலிக்கச் செய்கின்றனர்.
அடுத்து வரும் குளிர்காலத்தில் லடாக்கில் உள்ள மலைமுகடுகளை பனி சூழ்ந்திருக்கும் என்றும் அத்தகைய கடினமான பருவநிலைகளை இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்றும் அந்த அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல்வாதிகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காக இந்திய வீரர்கள் இந்தப் பயனற்ற நடவடிக்கையில் ஈடுபட வேண்டி இருக்கும் என்றும் குளிர்காலத்தில் தேவைப்படும் சூடான உணவு, அத்தியாவசியத் தளவாடங்கள் ஆகியவை கிடைக்காமல் திண்டாட வேண்டி இருக்கும் எனும் அறிவிப்புகளையும் ஒலிபெருக்கிகள் மூலம் இந்திய வீரர்களின் காதுகளை எட்டும் வகையில் சீன ராணுவம் அறிவித்து வருகிறது.
கடந்த 1962, ஆம் ஆண்டும் பின்னர் 1967ஆம் ஆண்டிலும் எல்லையில் மோதல் நிகழ்ந்தபோது இதே தந்திரங்களைத்தான் சீனா கையாண்டது என்று இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி தெரிவித்ததாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இம்முறை சீன ராணுவம் எல்லையில் பஞ்சாபி பாடல்களையும் ஒலிக்கச் செய்கிறது.
ஒருவேளை பஞ்சாபில் இருந்து வந்துள்ள இந்திய துருப்புகள் லடாக் அருகே உள்ள மலை முகடுகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக சீனத் தரப்பு நினைத்திருக்கலாம் என்றும் முன்னாள் தளபதி குறிப்பிட்டதாக ஊடகச் செய்தி மேலும் தெரிவிக்கிறது.
முழுப் போருக்குத் தயார்
புதுடெல்லி: கிழக்கு லடாக்கில் சீனாவுடன் முழு அளவிலான போருக்குத் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய வீரர்கள் குளிர்காலத்தில் நடக்கும் போர் தொடர்பாக பெரும் அனுபவம் கொண்டுள்ளதாகவும் குறுகிய கால அறிவிப்பு என்றாலும் முழு வீச்சில் செயல்பட உளவியல் ரீதியில் தயாராக உள்ளனர் என்றும் அவர் கூறினார்.