குறை கூறுபவர்களையும் எதிர்மறையாகப் பேசுபவர்களையும் அறவே கண்டுகொள்ளக்கூடாது என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்த விஷயத்தில் அவர் நயன்தாராவைத்தான் பின்பற்றுகிறாராம்.
சினிமாவில் நடிக்க வந்த புதிதில் இவர் அளித்த ஒரு பேட்டியையும் அண்மையில் இவர் வெளியிட்ட காணொளி ஒன்றையும் ஒப்பிட்டு பலரும் பலவிதமாகக் கேள்வி எழுப்பி வருகிறார்கள். சிலர் கிண்டலும் செய்கிறார்கள்.
இதுகுறித்து ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று சிலர் கேட்கிறார்களாம். ஆனால் தமக்கு அதில் விருப்பமில்லை என்கிறார் ஐஸ்வர்யா. தனது இந்த முடிவுக்கான காரணத்தையும் அவர் விளக்குகிறார்.
“ஒரு விஷயத்துக்குப் பதில் சொல்ல வேண்டுமானால், வாழ்க்கை முழுவதும் பதில் சொல்லிக்கொண்டேதான் இருக்கவேண்டும். ஏனெனில் இங்கு அவ்வளவு கேள்விகள் உள்ளன.
“அண்மைய காணொளியில் எனது வாழ்க்கைப் பயணத்தை எவ்வளவு எளிமையாக சுருக்கமாகச் சொல்ல முடியுமோ அப்படி சொல்லியிருந்தேன். சென்னையில் உள்ள சைதாப்பேட்டை பகுதியில்தான் நான் நடித்த ‘காக்கா முட்டை’ படத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டன.
“ஆனால், அதே பகுதியில் நான் வேறு இடத்தில்தான் வசித்தேன்.
“அங்குள்ள எளிமையான மக்களின் வாழ்க்கை குறித்து நிஜமாகவே எனக்கு அதிகம் தெரியாது. எட்டு வயது முதல் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில்தான் வளர்ந்தேன். அந்த வயதில் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றி அப்படிஎன்ன புரிந்துவிடும்? அண்மைய காணொளியில் இதுகுறித்து வெளிப்படையாகப் பேசியதைத்தான் சிலர் விமர்சித்துள்ளனர். அவர்களுக்குப் பதில் சொல்ல நான் தயாராக இல்லை,” என்று திட்டவட்டமாகப் பேசுகிறார் ஐஸ்வர்யா.
தமது வாழக்கையில் நடந்த விஷயங்களை மாற்றிப் பேசவேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடுபவர், யாருடனும் சமரசம் செய்துகொள்ள வேண்டிய தேவையும் தற்போது தமக்கு எழவில்லை என்கிறார்.
“ஐந்தாண்டுகளுக்கு முன்பு எனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தால் பிறரது இரக்கத்தைச் சம்பாதிக்க முயற்சி செய்வதாக பேசப்பட்டிருக்கும். ஒரு விஷயத்தைச்சொல்வதற்கு நேரமும் இடமும் மிகவும் முக்கியம். அது எனக்குத் தெரியும். நான் மிகவும் தெளிவாக யோசித்துச் செயல்படக்கூடிய பெண். கிண்டல் செய்பவர்கள் அதைச் செய்து கொண்டேதான் இருப்பார்கள்,” என்கிறார் ஐஸ்வர்யா.
பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையே இல்லை என்று குறிப்பிடுபவர், நேர்மறையான சிந்தனைகள்தான் வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்குச் செல்ல கைகொடுக்கும் என்கிறார். இந்த தன்னம்பிக்கையுடன் கூடிய அணுகுமுறையை தான் நயன்தாராவிடம் கண்டதாகவும் சுட்டிக் காட்டுகிறார்.
“கிண்டல் செய்பவர்களைப் பற்றி நயன்தாரா ஒருமுறை மிகத்தெளிவாகப் பேசியிருந்தார். ‘நம்மை தரக்குறைவாக விமர்சிப்பவர்கள் அதே இடத்தில்தான் இருப்பார்கள். ஆனால், நாம் அவர்களைக் கடந்து பெரிய இடத்துக்கு போய்க்கொண்டே இருப்போம்’ என்றார் நயன்தாரா. அதுதான் உண்மை.
“நம்மைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவோர் இருக்கலாம். அவர்களைப் பார்த்து சிரித்தபடி நம் வழியில் செல்லவேண்டும். அதுதான் நல்லது,” என்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.