செந்தோசா தீவின் கடற்கரைகளுக்குச் செல்வோர் இனிமேல் முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
கொவிட்-19 கிருமிப் பரவலைத் தடுக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வசதியாக இச்செயல்முறை இடம்பெறுகிறது.
அடுத்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து தீவின் கடற்கரைகளுக்கு வார இறுதி, விடுமுறை நாள்கள் உள்ளிட்ட உச்ச நேரத்தில் செல்ல விரும்புவோர் இனி முன்பதிவு செய்ய வேண்டும்.
தஞ்சோங், பலாவன், சிலோசோ கடற்கரைகளுக்கான முன்பதிவு முறை மூன்று மாதங்களுக்கு சோதித்துப் பார்க்கப்படும் என்று செந்தோசா மேம்பாட்டுக் கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உச்ச நேரங்களில் இப்பகுதிகளில் அதிகமானோர் கூடுவதாக அந்த அறிக்கை குறிப்பிட்டது.
இந்த மூன்று கடற்கரைகளும் மொத்தம் 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் பாதுகாப்பு இடைவெளியுடன் 100 முதல் 350 பேர் வரையில் கூடலாம்.
அங்கு செல்ல விரும்புவோர், ஏழு நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்யலாம். அனுமதிக்கப்படக்கூடிய எண்ணிக்கையைப் பொருத்து அனுமதி கிடைக்கும். அக்டோபர் 17ஆம் தேதி வருகைக்கான முன்பதிவு, அக்டோபர் 10ஆம் தேதி தொடங்கும்.
https://www.sentosa.com.sg/beachreservations என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
வருகையாளர்கள் இரு நேர ஒதுக்கீட்டை தேர்வு செய்யலாம் - காலை 8 மணி முதல் பகல் 1 மணி வரை அல்லது பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை.
ஒவ்வொரு முன்பதிவிலும் ஐந்து பேருக்கு பதிவு செய்யலாம். தேர்ந்தெடுத்த கடற்கரைப் பகுதி, நேரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் மின்னஞ்சலை பதிவுசெய்வோர் பெறுவார்கள்.