சிங்கப்பூர் ஆயுதப்படைகளின் முழு நேர தேசிய சேவையாளராக இருந்த டேவ் லீ என்பவர் 2018ல் மரணமடைந்தார். அதன் தொடர்பில் ஆறு சேவையாளர்கள் மீது ராணுவ நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சு நேற்று தெரிவித்தது.
இரண்டு முழு நேர சேவையாளர்கள், நான்கு தயார் நிலை தேசிய சேவையாளர்கள் அடங்கிய அந்த ஆறு பேர் மீதும் முதன் முதலாக பிப்ரவரியில் குற்றம் சுமத்தப்பட்டது. அவர்களுக்கு $1,800 முதல் $4,500 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அவர்களில் மூவரின் பதவிநிலை, 3வது சார்ஜண்ட்டில் (என்எஸ்) இருந்து கார்ப்பரலாகக் குறைக்கப்பட்டது.
ஏழாவது சேவையாளர் ஒருவர் இந்த ஆண்டு ஜனவரியில் விடுவிக்கப்பட்டார். ஆனால் குற்றச்சாட்டில் இருந்து அவரை நீதிமன்றம் விடுவிக்கவில்லை.
இருந்தாலும் புற்றுநோய் காரணமாக அவர் பிப்ரவரி 13ல் மரணமடைந்தார். முதல் நிலை கார்ப்பரலாக இருந்த டேவ் லீக்கு சம்பவம் நிகழ்ந்தபோது வயது 19. அவர் முழு நேர தேசிய சேவையாளராக இருந்தார்.
முதலாவது காவற்படை பட்டாளத்தைச் சேர்ந்த வீரராக இருந்த அவர், 2018 ஏப்ரல் 18ஆம் தேதி பிடோக் முகாமில் 8 கி.மீ. வேக நடைப் பயிற்சியை முடித்த பிறகு வெப்பத் தாக்குதலுக்கு இலக்கானார்.
அதே ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி அவர் மரணமடைந்தார்.
தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென், அந்த மரணச் சம்பவம் நிகழ்ந்ததற்கு வழி வகுத்த காரணங்கள் பற்றிய பூர்வாங்க தகவல்களை 2018 ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பயிற்சி இடத்தில் வீரர்களுக்குப் பாதிப்பு ஏற்படும்போது அதைச் சமாளிக்க போதிய அளவில் ஏற்பாடு இல்லை என்பதும் மருத்துவ நிலையத்துக்கு வீரரைக் கொண்டு செல்ல தாமதமடைந்ததும் அந்த வீரர் வெப்பத்தாக்குதலுக்கு இலக்காகி மரணம் அடைய காரணமாக இருக்கக்கூடும் என்பது பூர்வாங்க அனுமானம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
விதிமுறையை மீறி இரண்டு படை வீரர்கள் தங்கள் கை பேசிகளைப் பயன்படுத்தியதற்காக, மரண சம்பவம் நிகழ்ந்த வேக நடைப் பயிற்சிக்கு முந்தைய இரவில் முதல்நிலை கார்ப்பரல் லீயும் அவருடைய படைப்பிரிவு சகாக்களும் 30 நிமிட நேரம் தண்டிக்கப்பட்டு இருந்தனர் என்றும் அமைச்சர் அப்போது கூறி இருந்தார்.
அந்தத் தண்டனையில் பல வித உடற்பயிற்சிகள் அடங்கும்
அதையடுத்து ஆயுதப்படைகளில் பயிற்சிப் பாதுகாப்பு மற்றும் குறைபாடுகள் பற்றி விவாதங்கள் தலைதூக்கின. இதனை அடுத்து ஐவரைக் கொண்ட ஆய்வுக் குழு அமைக்கப்பட்டது.