பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் (எஸ்.பி.பி) உடல், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டுத் தோட்டத்தில் இன்று பிற்பகல் போலிஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட திரு எஸ்.பி.பி., ‘எம்ஜிஎம் ஹெல்த்கேர்’ தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 1.04 மணிக்கு காலமானார்.
இதைத் தொடர்ந்து, அவரது நல்லுடல் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்த கூட்டம் வந்தபடியே இருந்ததால், தாமரைபாக்கத்தில் உள்ள அவரது பண்ணை வீட்டிற்கு வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்டது.
அப்போது வழிநெடுகிலும் எஸ்.பி.பி. உடலுக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தினர்.
பல்வேறு இடங்களில் இருந்தும் ஏராளமானோர் பண்ணை வீட்டிற்கு வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கிற்குப் பிறகு 72 குண்டுகள் முழங்க போலிஸ் மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.