இன்னும் அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலையிடங்களுக்குத் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும், அவ்வாறு செய்வதற்கு நிறுவனங்கள் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.ஊழியர்கள் வேலையிடத்துக்குத் திரும்புவதற்கு அவர்கள் பாதுகாப்பான தூர இடைவெளியில் அமர்வதற்கு அலுவலகத்தின் அமைப்பு முறையை மாற்றியமைக்க வேண்டும்.
அலுவலகத்தில் இருக்கும் ஊழியர்களுக்கு வெவ்வேறு வேலை நேரத்தை அறிமுகப்படுத்துவதும் பிரச்சினைகளை உருவாக்கும் என்று மனிதவள மேலாளர்கள் கூறுகின்றனர். ஊழியர்களைப் பாதி நேரம் வீட்டிலும் பாதி நேரம் அலுவலகத்திலும் வேலை செய்ய வைப்பது உற்பத்தித் திறனை வளர்க்காது. ஒன்று வீட்டிலிருந்தோ அல்லது அலுவலகத்திலிருந்தோ முழு நேரமாக வேலை செய்ய வேண்டும்,” என்றார் ‘எங்கேஜ்ராக்கெட்’ மனிதவள தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைமை நிர்வாகி திரு லியோங் சூ டுங்.
“தங்கள் ஊழியர்களை ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது ஒரு வாரம் விட்டு ஒரு வாரமோ அலுவலகத்தில் வேலை செய்ய சில நிறுவனங்கள் ஏற்பாடு செய்யலாம். இரு வாரத்துக்கு ஒரு முறை அலுவலகத்தில் வேலை செய்வதில் ஒரு நன்மை உண்டு. ஒருவேளை ஒரு வாரத்தில் ஊழியர் யாருக்காவது கொவிட்-19 கிருமித்தொற்று கண்டறியப்பட்டால் அதற்கு அடுத்த வாரத்தில் அனைத்து ஊழியர்களுக்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம். இதனால், ஊழியர்களிடையே கிருமிப் பரவல் தடுக்கப்படலாம்,” என்றார் மனிதவள நிபுணர்கள் கழகத்தின் தலைமை நிர்வாகி திரு மயன்க் பாரேக்.
இது குறித்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக வர்த்தகப் பள்ளியின் இணைப் பேராசிரியர் சோங் ஸாவ்லி கூறுகையில், “வழக்கத்துக்கு மாறான நேரங்களில் வேலை செய்வது அதிகமான மனவுளைச்சலுக்கு இட்டுச் செல்லும்.
“கொவிட்-19 நிலைமைக்கு முன் ஊழியர்கள் வழக்கமான நேரத்தில் வேலைக்குச் சென்று வந்தனர். எப்போது வேலைக்குச் செல்வது எப்போது வீடு திரும்புவது என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது, புதிய வேலை முறையால் எந்தெந்த நாட்களில் அலுவலகத்துக்குச் செல்லலாம் எப்போது அங்கிருந்து வீட்டுக்குத் திரும்பலாம் என்று அறியாத குழப்பத்துக்கு ஊழியர்கள் ஆளாகக்கூடும். இதுவும் மனவுளைச்சலை உண்டு பண்ணும்,” என்றார்.
“புதிய முறையில் வேலை செய்வது பற்றிய வெளிப்படையான மனப்போக்கை நாம் பெற்றிருக்க வேண்டும். அருகருகே அமர்ந்து வேலை செய்யும் முறையை கொவிட்-19 நிலைமை பல தொழில்துறைகளில் மாற்றிவிட்டது.
“எங்கள் நிறுவனத்தில் உள்ள ஒரு மாடி அலுவலகத்தில், காணொளி கருத்தரங்கு, எளிதில் மாற்றியமைக்கக்கூடிய வேலைப் பகுதிகள், திறந்தவெளி உரையாடல் இடங்கள் என்று மாற்றங்கள் உள்ளடக்கப்பட்டு மறுவடிவமைக்கப்பட்டுள்ளது,” என்றார் கிரேட் ஈஸ்டர்ன் காப்புறுதி நிறுவன மனிதவள மூலதனப் பிரிவின் நிர்வாக இயக்குநர் திரு ஜேம்ஸ் லீ.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் சமூக ஊடகப் பக்கங்களும் டெலிகிராம் தளமும் 7,100 பேரிடம் நடத்திய கருத்தாய்வில் பங்கேற்ற 62 விழுக்காட்டினர் இந்த வாரத்திலிருந்து வேலை செய்ய அலுவலகத்துக்குத் திரும்பும் யோசனையை வரவேற்கவில்லை என்று தெரிவித்தனர்.
எங்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்வதுதான் பிடித்துள்ளது
அலுவலகத்தில் வேலை செய்வதைவிட வீட்டிலிருந்து வேலை செய்வதுதான் தங்களுக்குப் பிடித்துள்ளது என்று மூவர் சண்டே டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தனர்.
வேலைக்குச் செல்லும் பயணம் குறைந்துள்ளது
அவர்களில் ஒருவர் ‘க்ளூ’ எனும் மக்கள் தொடர்பு நிறுவனத்தின் கணக்கு நிர்வாகி திரு கோ வு சோங். காலையில் அவர் ஒரு மணிநேரம் கழித்து தூக்கத்திலிருந்து விழிக்கிறார். வழக்கமான வேலை நேரம் முடிந்தவுடன் கணினி விளையாட்டுகளில் ஈடுபடுகிறார்.
ஹவ்காங்கில் உள்ள அவரது வீட்டிலிருந்து அலுவலகம் இருக்கும் நகர மண்டபப் பகுதியில் உள்ள ஓடியன் டவர்ஸுக்குச் செல்ல 30 வயது திரு கோ, முன்பு ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கொள்வார்.
வேலைக்குச் செல்லும் இந்தப் பயண நேரத்தை திரு கோ, வேலைக்குப் பிந்திய தனது பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்வார்.
தனது நிறுவனத்தின் ஊழியர்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதாலும் ஸூம் மெய்நிகர் கூட்டம் மூலம் ஊழியர்களிடம் பேசுவதாலும் ‘க்ளூ’ நிறுவனம் வாடகைக்கு எடுத்துள்ள தனது அலுவலக இடத்தைக் குறைத்துள்ளது.
குடும்பத்துடன் அதிக நேரம்
வீட்டிலிருந்து வேலை செய்வதால் தமது குடும்பத்துடன் அதிக நேரத்தைச் செலவழிக்க முடிகிறது என்று கூறுகிறார் கோஜெக் நிறுவனத்தில் பணியாற்றும் தரவு அறிவியல் நிபுணரான 26 வயது குமாரி மாளவிகா மேனன்.
கொவிட்-19 நிலைமைக்கு முன், இந்தோனீசியா, தாய்லாந்து, வியட்னாம் ஆகிய நாடுகளில் விற்கப்படும் கோஜெக் நிறுவனத்தின் கோஃபூட் பொருட்களின் வடிவங்களைப் பரிந்துரைக்கும் பணியில் ஈடுபடும் மாளவிகா, அடிக்கடி ஆய்வுப் பணிக்காக ஒரு வாரம் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்.
இப்போது வேலைநேரம் போக அதிக நேரம் கிடைப்பதால் மாளவிகா அவ்வப்போது சமையல் வேலைகளைக் கவனிக்கிறார், இணையத்தில் நெட்ஃபிளிக்ஸ் தளம் மூலம் திரைப்படங்களைப் பார்க்கிறார், வீட்டு வேலைகளைச் செய்ய உதவியாக இருக்கிறார்.வீட்டில் பெற்றோர், தனது 24 வயது சகோதரி ஆகியோருடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பதாகக் கூறுகிறார் இவர்.
கவனத்தைச் சிறப்பாக ஒருமுகப்படுத்த முடிகிறது
வீட்டிலிருந்து வேலை செய்வது ‘பிபிஏ ரோபோட்டிக்ஸ்’ நிறுவனத்தில் மூத்த படைப்பாக்க அதிகாரியான 29 வயது குமாரி துளசி பன்னீர்செல்வத்துக்குப் பிடித்துள்ளது.
“சில நேரங்களில் எனது கவனத்தை ஒருமுகப்படுத்த என் அறையில் இசையை அதிக அளவில் ஒலிக்கச் செய்வேன். அதை எனது அலுவலகத்தில் செய்ய முடியாது. பிற்பகல் ஒரு மணியிலிருந்து இரண்டு மணி வரை மெய்நிகர் கூட்டம் இருந்தால், அதன் பிறகு பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நான் எனது வடிவமைப்புப் பணியில் கவனம் செலுத்துவேன்.
“அலுவலகத்தில் அதிகமானோருடன் வேலை செய்யும்போது, கவனத்தை ஒருமுகப்படுத்துவதில் சிரமம் ஏற்படலாம்,” என்றார் துளசி.
அலுவலகத்தைவிட வீட்டில் இருந்து வேலை செய்யும்போது, வேலைக்குப் பயணம் செய்யும் நேரத்தை மற்ற வழிகளில் பயன்படுத்தலாம் என்கிறார் ‘டெலிகேட்’ எனும் இணைய விற்பனைத்தளத்தில் வேலை செய்யும் ஊழியர் குழுத் தலைவரான 32 வயது திருவாட்டி வனேசா மணிகோன்.
“வீட்டில் மேசைக் கணினியும் விசைப்பலகையும்தான் எனது பணிக்கான கருவிகள். மேலும் எனது அறை குளிரூட்டியின் வெப்பநிலையை என்னால் கட்டுப்படுத்த முடியும். அது எனது வேலைக்குச் சாதகமாக அமைந்துள்ளது,” என்றார் வனேசா.