அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் குடித்துக்கொண்டிருந்த குடிநீருக்குள் இருந்த நுண்ணுயிரி அவனது மூளையைத் தாக்கிக் கொன்றதைத் தொடர்ந்து மாநில முதல்வர் உடனே அவசர நிலையை அறிவித்திருக்கிறார்.
நேகிளேரியா ஃபவ்ளரி (Naegleria fowleri) என்ற அந்த நுண்ணுயிரி இம்மாதத்தின் முற்பகுதியில் அந்தப் பையனைத் தாக்கியதாக லேக் ஜாக்சன் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். மிதமான வெப்பநிலை இருக்கும் ஏரிகளிலும் ஆறுகளிலும் இந்த நுண்ணுயிரி வழக்கமாக காணப்படுவதாகவும் அது மூக்கின் வழி மனித உடலுக்குள் நுழைவதாகவும் அமெரிக்காவின் நோய்க்கட்டுப்பாடு, தடுப்பு நிலையம் தெரிவித்தது. இந்த நுண்ணுயிரி வாய்வழியாக மனித உடலுக்குள் நுழைந்தால் அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் துயரச் சம்பவத்தை அடுத்து எட்டு நகரங்களில் எவரும் குடிநீரைப் பயன்படுத்தாதபடி உள்ளூர் நீர் பயனீட்டு ஆணையம் ஒரு நாள் உத்தரவிட்டது. பின்னர், எல்லாக் குடிநீரையும் கொதிக்கவிட்ட பிறகு பயன்படுத்தும்படி உத்தரவிடப்பட்டது.
இத்தகைய சம்பவங்களால் பிள்ளைகளும் பதின்ம வயதினரும் பெரும்பாலும் பாதிக்கப்படுவதாக அமெரிக்காவில் பதிவாகும் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.