மண்டாய் வட்டாரத்தில் பழைய உலோகத் தொழிற்சாலையில் கடந்த வாரம் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் உயிரிழந்தார்.
கடந்த வியாழக்கிழமை 228A மண்டாய் எஸ்டேட்டில் நிகழ்ந்த தீச்சம்பவத்தில் சீன நாட்டவரான 50 வனது திரு வாங் ஹாய் தாவுக்கு மிக கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அவரை இங் தெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்கு திரு வாங் உயருக்காகப் போராடினார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.
திரு வாங் வெர்ல்டு மெட்டல் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் ஊழியர் என்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான திரு லுவோ உறுதி செய்திருப்பதாக சீனமொழி நாளிதழான வான்பாவ் தெரிவித்தது. திரு வாங்கின் மரணம் குறித்து திரு லுவோ வருத்தம் தெரிவித்தார். அவரது வாங்கிற்கு அவரது குடும்பத்தாரும் நண்பர்களும் இறுதி மரியாதை செலுத்த தேவையான ஏற்பாடுகளை தமது நிறுவனம் செய்ததாக திரு லுவோ கூறினார்.
“திரு வாங் மருத்துவமனையில் இருந்தபோது சீனாவில் இருக்கும் அவரது குடும்பத்தாருடன் ஒவ்வொரு நாளும் காணொளி மூலம் பேச நாங்கள் ஏற்பாடு செய்தோம். அவரது இறுதி மூச்சு வரை இதற்கு நாங்கள் ஏற்பாடு செய்தோம்,” என்று திரு லுவோ தெரிவித்தார்.
திரு வாங் ஒரு சிறந்த ஊழியர் என்றும் பொறுப்புள்ள தந்தை என்றும் திரு லுவோ வர்ணித்தார். அவரது குடும்பத்துடன் சேர்ந்த இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகளை நிறுவனம் செய்யும் என்றார் அவர்.
தீச்சம்பவத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.