கோலாலம்பூர்: வெளிநாட்டுத் தரப்புகளிடமிருந்து அரசியல் கட்சிகளும் அரசியல்வாதிகளும் நன்கொடை பெறுவதைத் தடுக்க வேண்டும் என்று மலேசி யாவில் சிறப்புக் குழு ஒன்று பரிந்துரைத்துள்ளது. அரசாங்கக் குத்தகைகளைப் பெறும் நிறுவனங்கள் எந்த வகை அரசியல் பங்களிப்பு செய்வதையும் தடை செய்ய வேண்டும். நன்கொடைகளுக்கான உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். 3,000 ரிங்கிட்டிற்கு அதிகமாக நன்கொடை கொடுத்தால் அந்த விவரம் பற்றியும் அந்தத் தொகையை யார் நன்கொடையாக வழங்குகின்றனர் என்ற விவரமும் அறிவிக்கப்பட வேண்டும். அரசியல் நிதியளிப்பு மீதான தேசிய ஆலோசனைக் குழு அதன் அரசியல் அறிக்கை யில் முன்வைத்துள்ள 32 பரிந்துரைகளில் இவையும் அடங்கும்.
குழுத் தலைவரும் பிரதமர் அலுவலக அமைச்சருமான பால் லோ நேற்று கோலாலம்பூரில் அந்த அறிக்கையை வெளி யிட்டார். அரசியல் கட்சிகள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்டு அந்தத் தொகையை மத்திய அல்லது மாநில அளவில் அமைக்கப்பட்ட சிறப்பு வங்கிக் கணக்கில் போடவேண்டும் என்று திரு லோ கூறினார். வெளிநாட்டுத் தரப்புகள் என்பது மலேசியாவில் வசிக்காத தனிப்பட்டவர்கள், நிறுவனங்கள், அறநிறுவனங்கள், சங்கங்கள் ஆகியவையும் பதிவுபெற்ற மற்றும் பதிவுபெறாத மற்ற அமைப்புகளையும் குறிக்கும். தேசிய ஆலோசனைக் குழுவின் பரிந்துரைகள் மலேசிய அமைச்சரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளன. இந்த பரிந்துரைகள் முழுமையாக நடப்புக்கு வருவதற்கு முன்னதாக 15வது பொதுத் தேர்தலுக்கும் இவை கொண்டு செல்லப்படலாம் என்று கூறப்படுகிறது.