துடிப்புமிக்க, புத்தாக்கமிக்க பொருளியலை வளர்ப்பது மட்டுமே சிங்கப்பூரின் நோக்கம் அல்ல என்றும் அனைத்து சிங்கப்பூரர்களையும் மேம்படுத்தும் வகையில் அனைவரையும் உள்ளடக்கிய பொருளியலை வளர்ப்பதும் நோக்கம் என்றும் கூறியுள்ளார் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட்.
நாடாளுமன்றத்தில் நேற்று அமைச்சர்நிலை அறிக்கையை தாக்கல் செய்த அவர், அதை இரண்டு வழிகளில் அடையலாம் என்றார். பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களைக் கைதூக்கிவிட முழுமையான ஆதரவு வழங்குவது அதில் ஒரு வழி.
காலத்துக்குப் பொருந்திய நிலை யில் ஊழியர்களின் திறன்கள் இருப்பதை உறுதிசெய்வது மற்றொரு வழி. குறிப்பாக, குறைந்த வருமான முடைய ஊழியர்கள் கொவிட்-19 சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
“நீண்ட கால பொருளியல் கட்டமைப்பு மாற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ள சில்லறை வர்த்தகம், உணவு, பான துறைகளைச் சேர்ந்த இந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் வேலை செய்வதால் அவர்கள் இரட்டை சவாலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சிலர் தன்னுரிமை தொழில்களிலும் உள்ளனர்,” என்று அவர் சொன்னார்.
நடுத்தர வருமானமுடைய, நடுத்தர வயதுடைய ஊழியர்களுக்கு ஏற்கெனவே குடும்ப பொறுப்புகளும் கடமைகளும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் அதிவேகமாக மாறிவரும் மனிதவள சூழல் ஏற்படுத்தும் சவாலையும் அவர்கள் சந்திக்கவேண்டியுள்ளதை அவர் சுட்டினார்.
“திறன்களை வளர்க்கவும் நல்ல நீண்டகால வாய்ப்புகள் இருக்கும் வேலைகளில் மாறிக்கொள்ளவும் இதுபோன்ற ஊழியர்கள் அவசரமாக செயல்படவேண்டும்,” என்றார் பொருளியல் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் நிதியமைச்சருமான திரு ஹெங்.
சிங்கப்பூரிலுள்ள அதிகம் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்களுக்கு வேலைச் சந்தையை மேம்படுத்துவது மாபெரும் முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டார்.